என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன்.
    • வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும்.

    திருமங்கலம்:

    திருப்பரங்குன்றத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகிறது. காந்தியின் நினைவு நாளை ஒருமைப்படுத்தும் நாளாக பார்க்கிறேன்.

    சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை தலைமை நியமித்த குழு தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து பேசி உள்ளேன்.

    என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் தன்மானம் முக்கியமானது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பதையும் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலைவரும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.

    இந்தியா கூட்டணி என்பது பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை ஒட்டிய காங்கிரஸ் சகோதரர்களை பாராட்டுகிறேன்.

    வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அங்கு அமைப்பு ரீதியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்த உள்ளோம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வந்தே மாதரம் என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்கவும் தெரியும். முதலில் தேர்தல் அறிவிக்கட்டும். கூட்டணி முடிவான பின் தொகுதி பங்கீடு பற்றி பிறகு பேசுவோம் என்றார். 

    • கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வம் நாடகமாடுகிறார்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பல்வேறு முறை சட்டசபையில் பேசியிருக்கிறேன். தொகுதி வாரியாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மதுரை மேற்கு தொகுதியில் 10 திட்டங்களை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் ஒரே ஒரு திட்டம் மட்டும் செயல்முறைக்கு வந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தி.மு.க. அரசுக்கு எதிராக சுனாமி போல தமிழக மக்கள் வெகுண்டு எழுந்து உள்ளனர்.

    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் நாங்களும் அவரை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார்.

    ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை. இது வினோதமாக இருக்கிறது. அவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

    கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது. 1991-ல் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார். பின்பு அவரும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் தொடர்ந்து பத்திரிகைகளில் தனது உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தார். எனவே தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. பேசக்கூடாது.

    அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம். வருகிற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிகைகள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர், அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகள் தெரிந்து எப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா? இதை முறைப்படி எப்படி தெரிவிக்க வேண்டும்.

    எனவே ஓ.பன்னீர் செல்வம் இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார். கருணாநிதி, ஸ்டாலின் நாடகங்களை எல்லாம் பார்த்து விட்டோம். எனவே ஓ.பன்னீர் செல்வத்தின் நாடகம் எங்களிடம் எடுபடாது என்றார். 

    • நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படுகிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் திருத்தணி கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி தரிசனம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், மலர் காவடி, மயில் காவடி சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபட உள்ளனர். மேலும் சண்முக கடவுளுக்கு காவடி மண்டபத்தில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    தைப்பூச நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வருவார்கள் என்பதால் மலைக் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதையடுத்து வாகன நெரிசலை தடுக்கும் வகையில் தைப்பூசத்தன்று ஆட்டோக்கள் மற்றும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மலைக்கு சென்று வர அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
    • இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சென்னை :

    தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கூடுகிறது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. 

    • காங்கிரசுடனான கூட்டணியில் எந்த மோதலும் இல்லை.
    • எந்த கட்சி கூட்டணியில் இணையும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.

    நெல்லை:

    நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறது.

    நெல்லையில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது சந்தோஷமாக உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதை இது காட்டுகிறது. அடுத்ததாக அமையப் போவதும் தி.மு.க ஆட்சி தான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன் வைக்கிறார்கள்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க. தான் என்பதை மக்கள் அறிவார்கள். எங்கள் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் நிச்சயமாக வந்து இணைய வாய்ப்புகள் உள்ளது.

    ஆனால் அது குறித்து எங்களின் தலைவர் மு.க ஸ்டாலின் தான் இறுதி முடிவை எடுப்பார். கருத்துக்கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருப்பதை எங்களால் கண்கூடாக பார்க்க முடிகிறது. மக்களின் பேராதரவு எங்களுக்கே இருக்கிறது. சமீபத்தில் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தோடு தி.மு.க. பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே.
    • இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர் கள் போராட்டம் தொடர்வது பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே. அது மீண்டும் தொடரும்போது இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கி விட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பணிபுரிவார்கள்.

    இதுபோன்று பணியில் இருப்பவர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்ய முடியாது. அண்ணாமலையிடம் வேறு மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்திருக்கிறார்களா என்று பத்திரிகையாளர்களாகிய நீங்களே கேட்டு சொல்லவும்.

    பணி நிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். 'கம்யூனல் ரொட்டேசன்' இல்லாமல் எந்த பணியாளரையும் பணிநிரந்தரம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கூறும். இந்த நிலையில் இதனை தெரிந்து கொண்டே போராட்டம் செய்வது என்பது ஒரு சிலர் தூண்டிவிட்டு நடத்துவது. அரசு ஊழியர் போராட்டம் அல்ல, இன்னொன்று ஊழியர் சங்கங்கள் அல்ல, தனிநபரின் தூண்டுதல் இருக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இங்கு போராட்டத்தை தூண்டி விட்டார், நாங்கள் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம்.

    இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும். தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இதுபோன்று தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சொல்லியிருந்தேனே தவிர போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

    நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம், இதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். 1980களிலே நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசை எதிர்த்து தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் நடத்தி எம்.ஜி.ஆரையே கீழே வரவழைத்து 500 பெண் தொழிலாளர்கள் முன் பேச வைத்து அவருக்கு நேராக விவாதம் செய்தவன் நான். அதனால் தொழிற்சங்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!
    • நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

    மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!

    அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

    மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்!

    #வெல்வோம்_ஒன்றாக!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.
    • கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் நல்ல முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வதந்திகள் எல்லாவற்றிற்கும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை மீண்டும், மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார்.

    ஆகவே, எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.

    தேர்தலைப் பற்றி எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள்.

    கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும். இல்லையென்றால் அகில இந்திய தலைமை கூறுவார்கள். மீதி பேர் நினைக்கிற கருத்துக்கள் எங்ககிட்ட வந்து சொல்லலாம். பொதுவெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பலமுறை நானும் சொல்லியிருக்கிறேன். அகில இந்திய தலைமையும் சொல்லியிருக்கிறது. பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என்றார்.

    • பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
    • பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். தங்களின் அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம்.
    • தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

    சென்னை:

    அரசு டாக்டர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

    அதன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வந்த டாக்டர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர்.

    ஒத்துழையாத போராட்டம் என்ற அடிப்படையில் அரசு டாக்டர்கள் பல்வேறு பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் பயோமெட்ரிக் வருகை பதிவை புறக்கணிப்பது வாட்ஸ் அப் குழு, ஆன்லைன் மற்றும் நேரடியாக நடைபெறும் அலுவல் சார்ந்த கூட்டங்களை புறக்கணித்தல், மருத்துவ மாணவர்களின் வகுப்புகள் புறக்கணிப்பு என அரசுக்கு ஒத்துழைக்காமல் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். சம்பள உயர்வு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ரூ.3000 படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.

    அதனை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொள்ளாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் நிறைவேற்ற முன்வரவில்லை.

    இன்று முதல் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளோம். 4 பணிகளை புறக்கணித்து உள்ளோம். பிப்ரவரி 4-ந் தேதி வரை ஒத்துழையாமை போராட்டம் நடைபெறும். அதன் பின்னர் மாநில செயற்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்வோம்.

    தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மருத்துவர்கள் சேவையில் எந்த குறைவும் இருக்காது. அடுத்த வாரம் புதன்கிழமை மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு  மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    • பா.ஜ.க.வின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான்.
    • கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் 2 நாள் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.வின் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதாவது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா?

    * பா.ஜ.க.வின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான்.

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் ஊழல்வாதிகள் வெளுக்கப்பட்டு விட்டனரா?

    * இந்தி திணிப்பை ஏற்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி எப்போது வரும்?

    * களத்தில் எங்களை எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தான் வாரிசு அரசியல்.

    * ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுடன் தான் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது.

    * கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. அது துரோகக்கூட்டணி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×