search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டத்தில் கடலுக்குள் பயங்கர சூறைக்காற்று: 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லாத கட்டுமரங்கள்
    X

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசை படகுகள்.

    குமரி மாவட்டத்தில் கடலுக்குள் பயங்கர சூறைக்காற்று: 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லாத கட்டுமரங்கள்

    • கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
    • கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது.

    குளச்சல்:

    கேரளாவின் அரபிக்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடலில் சூறைக்காற்றும், அலைகளின் கொந்தளிப்பும் அதிகமாக காணப்பட்டது.

    இதுதொடர்பாக கேரள கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அங்குள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். மேலும் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் கூறியிருந்தனர்.

    கேரள கடல் பகுதியில் காணப்பட்ட சீற்றம் காரணமாக குமரி மேற்கு கடல் பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இதனால் குளச்சல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற படகுகள் கரை திரும்பி வருகின்றன. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் உள்ளன.

    இதில் கரை திரும்பிய படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல கட்டுமரங்கள், வள்ளங்களும் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 2-வது நாளாகவும் குளச்சலில் கடலுக்குள் பயங்கர சூறைக்காற்று வீசியது. அலைகளும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக 2-வது நாளாக இன்றும் விசை படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    குறைந்த அளவிலேயே கட்டுமரங்களும், வள்ளங்களும் மீன்பிடிக்க சென்றன. அவையும் அவசரமாக கரை திரும்பியது.

    விசைபடகுகள் மற்றும் கட்டுமரங்கள், வள்ளங்கள் அவசரமாக கரை திரும்பியதால் குறைந்த அளவே மீன்கள் பிடிப்பட்டன. குறிப்பாக சூறை, புல்லன் இறால் போன்ற மீன்களையே மீனவர்கள் பிடித்து வந்தனர்.

    அவற்றை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். போதிய மீன்வரத்து இல்லாததால் மீனவர்களும், வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.

    கன்னியாகுமரி கடல் பகுதியிலும் இன்று கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 6-ந் தேதிதான் திறக்கப்பட்டது. இப்போது கடல் சீற்றம் காரணமாக அங்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×