search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது- திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி
    X

    நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது- திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி

    • பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.
    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.

    தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ. 30 உயர்ந்திருந்தது. மே மாதம் மேலும் ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டன. இதனால் திருப்பூர் தொழில் துறையினர் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    மேலும் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை குறைக்க வலியுறுத்தியும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நூல் விலை ரூ.40 குறைந்தது. அதேபோல் இந்த மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்திருந்தது.

    அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.333-க்கும், 24-ம் நம்பர் ரூ.345-க்கும், 30-ம் நம்பர் ரூ.355-க்கும், 34-ம் நம்பர் ரூ.375-க்கும், 40-ம் நம்பர் ரூ.395-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.325-க்கும், 24-ம் நம்பர் ரூ. 335-க்கும், 30-ம் நம்பர் ரூ.345-க்கும், 34-ம் நம்பர் ரூ. 365-க்கும், 40-ம் நம்பர் ரூ.385-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×