search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாத்தூர் கழிவுநீரகற்று நிலையத்துக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவு நீரால் துர்நாற்றம்- சுகாதாரகேடு: பொதுமக்கள் கடும் அவதி
    X

    மாத்தூர் கழிவுநீரகற்று நிலையத்துக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவு நீரால் துர்நாற்றம்- சுகாதாரகேடு: பொதுமக்கள் கடும் அவதி

    • நீரேற்று நிலையம் அமைந்து உள்ள பகுதியை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    மணலி அருகே உள்ள மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலையில் கழிவுநீ ரகற்றும் நிலையம் செயல்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறக் கூடிய கழிவு நீர் பாதாள சாக்கடை வழியாக இந்த கழிவு நீரகற்று நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து பல்ஜிபாளையம் அருகே உள்ள பிரதான கழிவுநீர் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாதாள சாக்கடை வசதி இல்லாத இடங்களில், வீடுகளில் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் லாரிகள் மூலம் கழிவு நீர் எடுக்கப்பட்டு மாத்தூரில் உள்ள கழிவுநீரகற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு வெளியேற்றப்படுகிறது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுநீர் கொண்டு வரப்படுவதாக தெரிகிறது.

    இவ்வாறு தினந்தோறும் லாரியில் இருந்து கழிவுநீர் கொண்டுவரப்படுவதால் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இங்குள்ள நீரேற்றுநிலையம் முழுவதும் நிரம்பி உள்ளது. இதனால் நீரேற்று நிலையம் அமைந்து உள்ள பகுதியை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கழிவுநீரகற்று நிலையத்துக்கு லாரியில் கொண்டுவந்து கழிவு நீரை ஊற்றுவதை தடை செய்ய வேண்டும். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. சுவாச பிரச்சினை மற்றும் சுகாதாரகேடு ஏற்படுகிறது. எனவே லாரிகளில் கொண்டு வரும் கழிவு நீரை கொடுங்கையூரில் உள்ள நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுபற்றி கழிவுநீரகற்று மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.

    இது குறித்து மணலி மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறும்போது, வீடுகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீரை மாத்தூரில் உள்ள நிலையத்திற்கு கொண்டு வராமல் பல்ஜிபாளையத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.அதற்கான அனுமதி கிடைத்தவுடன் இங்கு லாரிகளில் கழிவு நீர் கொண்டு வரப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றனர்.

    Next Story
    ×