search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்னணு எந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு- கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு
    X

    மின்னணு எந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு- கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு

    • முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

    சின்ன சின்ன அசம்பாவித சம்பவங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களோ, மோதலோ ஏற்படவில்லை. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகிறது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

    மாலை 6 மணிக்கு பிறகு வரிசையில் நின்றவர்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து ஓட்டு போட்டனர். இதனால் சில மையங்களில் இரவு 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் பிறகே பல வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதே போன்று 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட மையங்களில் எண்ணப்படுகிறது.

    தேர்தல் முடிந்து 45 நாட்கள் கழித்தே ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுவதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும், 3-வதாக ஆயுதப்படை போலீசும், 4-வதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

    டி.எஸ்.பி. அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையிலும் பல இடங்களில் அந்த பணிகள் நீடித்தன.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு இன்று காலையில் கொண்டு சேர்க்கப்பட்ட மின்னணு எந்திரங்கள் 'ஸ்டிராங் ரூம்' என்று அழைக்கப்படும் அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    ஸ்டிராங் ரூம் அறையை சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை தாண்டி மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இப்படி வாக்கு எண்ணும் மையங்களில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 10 ஆயிரம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    Next Story
    ×