search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத்து 10 டன்னாக அதிகரிப்பு
    X

    சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத்து 10 டன்னாக அதிகரிப்பு

    • வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும்.
    • சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி, வரகம்பட்டி, காரிப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் விற்பனையும் நடைபெறுகிறது.

    வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்களுக்கு கடந்த மாதம் மாங்காய் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து சேலம் மார்க்கெட்களுக்கு மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி உள்பட சில ரகங்கள் மட்டும் மார்க்கெட்களுக்கு வருகிறது.

    சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. ஆனாலும் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ விற்பனை அதிக அளவில் வரவில்லை. இதனால் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்களில் கடந்த ஆண்டு இதே நாளில் 30 முதல் 40 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 10 டன்னாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாமரங்களில் பூத்த பூக்கள் உதிர்ந்துள்ளது. இதனால் தற்போது மாம்பழ வரத்து உடனடியாக அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலையும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×