search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு வெளியூர்களில் இருந்து 4 ஆயிரம் பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது
    X

    சென்னைக்கு வெளியூர்களில் இருந்து 4 ஆயிரம் பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது

    • அரசு விடுமுறை இன்று முடிவதால் நாளை முதல், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும்.
    • நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சுமார் 10 லட்சம் பேருக்கு மேல் சொந்த ஊர்களுக்கு பயணமாகி உள்ளனர். சிறப்பு பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்ற அவர்கள் கொண்டாட்டம் முடிந்து மீண்ம் சென்னை திரும்ப அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 15-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.

    அரசு விடுமுறை இன்று முடிவதால் நாளை முதல், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும். இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பு பயணத்தை தொடங்கினார்கள். ஏற்கனவே அரசு பஸ்கள், ரெயில்கள், ஆம்னி பஸ்களில் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரம் பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன.

    நாகர்கோவில், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு இன்று பயணம் செய்ய 47 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இதே போல் ஆம்னி பஸ்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். மாலையில் இருந்து பயணத்தை தொடங்குவதால் பஸ், ரெயில் நிலையங்களில் இன்று மாலை முதல் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும் பலர் பகல் நேர ரெயில்களில் பயணத்தை தொடங்கி இரவிற்குள் சென்னைக்கு வரவும் திட்டமிட்டு புறப்பட்டனர். நெல்லையில் இருந்து வந்தே பாரத், மதுரையில் இருந்து வைகை, கோவையில் இருந்து இண்டர்சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகல் நேர ரெயில்கள் அனைத்தும் நிரம்பின.

    இதே போல் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர், வந்தே பாரத், கோவை எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காத்திருப்போர் பட்டியலுடன் சென்றன.

    வெளியூர்களில் இருந்து இன்று புறப்பட்டு வரும் பஸ்கள் நெரிசல் இல்லாமல் சென்னை வருவதற்கு போலீசாரும், போக்குவரத்து கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பெருங்களத்தூர், தாம்பரம், மதுரவாயல், வடபழனி, கோயம்பேடு, ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×