search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் மீண்டும் டவுன் பஸ்சில் மாணவர்கள் மோதல்- 5 பேர் கைது
    X

    நெல்லையில் மீண்டும் டவுன் பஸ்சில் மாணவர்கள் மோதல்- 5 பேர் கைது

    • பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
    • ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த ஒரு மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை சமாதானபுரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மோதலையடுத்து போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

    இதேபோல் சில வருடங்களுக்கு முன் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அப்போதைய பாளை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து திருக்குறளை எழுதுமாறு நூதன தண்டனை வழங்கினார்.

    இந்நிலையில் நேற்று பிளஸ்-2 மாணவர்கள் அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு வந்துள்ளனர். அதே பஸ்சில், தனியார் டுடோரியல் சென்டரில் படிக்கும் மாணவர்களும் வந்துள்ளனர். அவர்கள் இரு தரப்பினருக்கும் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது பஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உள்ள நிறுத்தத்தில் நின்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த ஒரு மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த அந்த மாணவனின் பெற்றோர் பாளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 5 மாணவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×