search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் கைது
    X

    அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உடற்கல்வி ஆசிரியர் கைது

    • போலீசார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் பிரபாகரனை கைது செய்தனர்.
    • கலெக்டர் சமீரனின் பரிந்துரையின் பேரில் ஆசிரியர் பிரபாகரனை, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் முன்னதாக வால்பாறையில் உள்ள பள்ளியில் பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் இந்த பள்ளிக்கு வந்தார்.

    பள்ளிக்கு வந்த நாளில் இருந்தே இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் தொட்டு பேசுவது, என பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரது தொல்லை அதிகரிக்க மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் முறையிட்டனர். இதை கேட்டு மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் இன்று காலை பள்ளி முன்பு திரண்டனர்.

    அவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை உடனே பணியை விட்டு நீக்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி மாணவிகள் கூறுகையில், இந்த ஆசிரியர் வந்ததில் இருந்தே மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து நாங்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பெற்றோரிடம் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    இதற்கிடையே போராட்டம் பற்றி அறிந்ததும் உதவி கமிஷனர் ரகுபதி, குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் பிரபாகரனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கலெக்டர் சமீரனின் பரிந்துரையின் பேரில் ஆசிரியர் பிரபாகரனை, மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, போலீசாருக்கும், கோட்டாட்சியருக்கும் கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×