search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை- அண்ணன் கைது
    X

    காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை- அண்ணன் கைது

    • சரண்யா தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.
    • தங்கள் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட தகவலை அறிந்து சரண்யாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 24). இவர், நர்சிங் படித்துவிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது தாயார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர். அங்கு தாயாருக்கு உதவியாக சரண்யா உடன் இருந்து கவனித்து வந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொன்னூரை சேர்ந்தவர் மோகன்(31). இவரது தாயாரும் மனநலம் பாதிக்கப்பட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தாயாருக்கு உதவியாக மோகன் உடன் இருந்து கவனித்து வந்தார்.

    சரண்யாவின் தாயாரும், மோகனின் தாயாரும் ஒரே இடத்தில் அருகருகே உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்ததால் மோகனும், சரண்யாவும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர்.

    இதனால் இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சரண்யாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனை அறிந்ததும் சரண்யாவின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை சரண்யாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர்.

    இதனையடுத்து சரண்யாவை தங்கள் உறவினர் வகையில் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க சரண்யாவின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனால் சரண்யாவுக்கு தங்கள் உறவு வகையில் ஒரு மாப்பிள்ளையை தேடினர். இதனையடுத்து சோழபுரம் அருகே உள்ள தேவனாஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    தனது பெற்றோர் தனது காதலை ஏற்றுக்கொள்ளாமல் வேறு இடத்தில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததை அறிந்து சரண்யா மிகுந்த வேதனை அடைந்தார். இந்த தகவலை தனது காதலன் மோகனிடம் சரண்யா தெரிவித்தார்.

    தனது பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்காது என்று முடிவு செய்த சரண்யா தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தார். இந்த விவரத்தை சரண்யா தனது காதலனிடம் தெரிவித்தார். இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

    தங்கள் மகள் காதல் திருமணம் செய்துகொண்ட தகவலை அறிந்து சரண்யாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் தீர்த்துக்கட்டுவது என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக சரண்யாவின் குடும்பத்தினர் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.

    இதனைத்தொடர்ந்து சரண்யாவின் அண்ணன் சக்திவேல் சரண்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எங்களுக்கு தெரியாமல் நீ திருமணம் செய்து கொண்டு விட்டாய். நடந்தது, நடந்ததாக இருக்கட்டும். உங்களுக்கு நாங்கள் விருந்து வைக்க வேண்டும். எனவே நீங்கள் இருவரும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

    இதை உண்மை என்று நம்பி இருவரும் நேற்று சென்னையில் இருந்து சோழபுரம் துலுக்கவேலிக்கு வந்தனர். நேற்று மாலை புதுமண தம்பதி இருவரும் சரண்யாவின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல்(31) மற்றும் சக்திவேலின் உறவினரும், சரண்யாவுக்கு நிச்சயம் செய்து இருந்த மாப்பிள்ளையுமான தேவனாஞ்சேரியை சேர்ந்த ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டு வாசலில் வைத்து புதுமணத்தம்பதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அதே இடத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரிவாளால் வெட்டிக்கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களது உடல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கொலை சம்பவம் குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை வலைவீசி தேடி வந்தனர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×