search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- மருது அழகுராஜிடம் விசாரணை
    X

    கொடநாடு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- மருது அழகுராஜிடம் விசாரணை

    • தனிப்படையினர் இதுவரை ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
    • கொடநாடு வழக்கில் இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.

    இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது இவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு சம்பந்தமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனிப்படையினர் இதுவரை ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கில் இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி கோவையை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார், புதுச்சேரியை சேர்ந்த நவீன் பாலாஜி, மதுரையை சேர்ந்த லாஜி வோரா, ஜெயலலிதா முன்னாள் டிரைவர் குணசேகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர்.

    இதையடுத்து இன்று மருது அழகுராஜ் கோவை வந்தார். காலை 11.45 மணிக்கு அவர் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை குறித்து ஏதாவது தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் தகவல்களை சேகரித்தனர்.

    Next Story
    ×