search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழிக்குப்பழியாக விவசாயி கொலை: சேரன்மகாதேவியில் பதட்டம் நீடிப்பு - போலீஸ் குவிப்பு
    X

    பழிக்குப்பழியாக விவசாயி கொலை: சேரன்மகாதேவியில் பதட்டம் நீடிப்பு - போலீஸ் குவிப்பு

    • மாலையின் தம்பி மகன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரது உறவினர் மகளை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
    • பழிக்குப்பழியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் சேரன்மகாதேவி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி என்ற ராசு(வயது 62).

    இவர் நேற்று மாலை சேரன்மகாதேவி கூட்டுறவு பால்பண்ணையில் பால் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பால்பண்ணை உள்ளே அவர் செல்லவும், அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

    இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே தெருவில் வசிக்கும் மாலை என்பவரது மனைவி மாரியம்மாள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாலையின் தம்பி மகன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரது உறவினர் மகளை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

    இந்தநிலையில் தான் கடந்த 24-ந்தேதி இருதரப்பிரனருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு அதில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலையின் மனைவி மாரியம்மாளை எதிர்தரப்பை சேர்ந்த நடராஜன் மகன்கள் சுரேஷ், ஆறுமுகம், கணேசன் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.

    இதனால் எதிர்தரப்பினர் அனைவரையும் போலீசார் ஊரை விட்டு வெளியேற்றினர். இந்த நிலையில் நடராஜனின் உறவினரான முத்துபாண்டியன் நேற்று பால் கொண்டு வந்தபோது 6 பேர் கும்பல் அவரை கொலை செய்தது என்பது தெரியவந்ததது. அவரது மகன் ஒருவருக்கு சமீபத்தில் நடந்த மாரியம்மாள் கொலையில் தொடர்பு இருந்ததாக நினைத்து எதிர்தரப்பினர் இந்த கொலையை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பழிக்குப்பழியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் சேரன்மகாதேவி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×