search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    100 அடி ஆழ கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து- கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

    • ரோட்டோரம் உள்ள தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு கார் தோட்டத்துக்குள் புகுந்தது.
    • ரோஷன் கார் ஓட்டி வந்ததால் அவர் மட்டும் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி நவாவூர் பிரிவைச் சேர்ந்தவர் விக்னேஸ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவரும், இவரது நண்பர்களும் கோவை சிறுவாணி சாலை பூலுவப்பட்டியில் உள்ள ரிசார்ட்டில் நேற்று ஓணம் பண்டிகையை கொண்டா டினர்.

    ஆதர்ஸ் அழைப்பை ஏற்று அவரது நண்பர்களான வடவள்ளி எஸ்.வி. நகரைச் சேர்ந்த ரோஷன் (19) மற்றும் ரவிகிருஷ்ணன் (18), நந்தனன் (18) ஆகியோரும் ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இவர்களும் கல்லூரி மாணவர்கள். இரவில் அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி விட்டனர்.

    இன்று கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் அதிகாலையே ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு செல்ல தயாரானார்கள். ஆதர்ஸ், ரோஷன், ரவி, நந்தனன் ஆகிய 4 பேரும் ஒரு காரில் வடவள்ளிக்கு புறப்பட்டனர். காரை ரோஷன் ஓட்டி வந்தார்.

    கார் வேகமாக வடவள்ளி நோக்கி வந்து கொண்டு இருந்தது. காலை 5.45 மணிக்கு தென்னமநல்லூர் கரியகாளியம்மன் கோவில் அருகே வந்தது. அங்குள்ள வளைவில் காரை ரோஷன் திருப்ப முயன்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    ரோட்டோரம் உள்ள தோட்டத்தின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு கார் தோட்டத்துக்குள் புகுந்தது. தோட்டத்தில் 100 அடி ஆழமுள்ள பெரிய கிணறு உள்ளது. 40 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி கிடக்கும் அந்த கிணற்றுக்குள் வேகமாக வந்த கார் பாய்ந்தது.

    ரோஷன் கார் ஓட்டி வந்ததால் அவர் மட்டும் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஆனால் மற்ற 3 பேரால் காருக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை. ஆதர்ஸ், ரவி, நந்தனன் ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே மூச்சுத்திணறி பலியானார்கள்.

    தப்பித்து வெளியே வந்த ரோஷன் நடந்த சம்பவத்தை அந்த பகுதியினரிடம் தெரிவித்து உதவி கேட்டார். கிணறு பாழடைந்து தண்ணீர் நிரம்பி கிடந்ததால் யாராலும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. மேலும் காரும் தண்ணீரில் ஆழமாக மூழ்கி கிடந்தது.

    இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

    ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முதலில் ரவி கிருஷ்ணனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 2-வதாக ஆதர்சின் உடல் மீட்கப்பட்டது. நந்தனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. மீட்கப்பட்ட உடல்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதிகாலையில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் பலியான நந்தனன் குத்துச்சண்டை வீரர் ஆவார்.

    Next Story
    ×