search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நொளம்பூரில் பெண் துப்புரவு தொழிலாளி எரித்துக் கொலை- கள்ளக்காதலன் கைது

    நொளம்பூரில் கை, காலை கட்டிப்போட்டு பெண் துப்புரவு தொழிலாளி எரித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (வயது 36).

    இவர் வளசரவாக்கத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ரேவதி பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து முருகன் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே நொளம்பூர்- மதுரவாயல் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள முட்புதரில் பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்றவர்கள் நொளம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது உடல் கிடந்த இடம் அருகே வீசப்பட்ட சிறிய மணி பர்சில் இருந்த ஆதார் கார்டில் ரேவதி என்று இருந்தது. ஒரு செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை வைத்து போலீசார் விசாரணை செய்த போது கொலையுண்ட பெண் மதுரவாயலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமான துப்புரவு தொழிலாளி ரேவதி என்பது தெரிந்தது.

    அவரது உடலை கணவர் முருகன் அடையாளம் காட்டினார்.

    இதை தொடர்ந்து ரேவதியின் செல்போனில் இருந்த அழைப்புகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் ரேவதி வேலை பார்த்த வளசரவாக்க மண்டல அலுவலகத்தில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் பேட்டரி ஆட்டோவில் டிரைவராக வேலை பார்த்து வரும் திம்மப்பா என்பவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த திம்மப்பா வளசரவாக்கத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது கொலையுண்ட ரேவதிக்கும், திம்மப்பாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிந்தது.

    இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திம்மப்பா, ரேவதியிடம் 5 பவுன் நகையை கடனாக வாங்கி இருந்தார்.

    பின்னர் அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நகை குறித்து ரேவதி கேட்ட போது நொளம்பூர்-மதுரவாயல் சர்வீஸ் சாலைக்கு வருமாறு திம்மப்பா அழைத்துள்ளார்.

    ரேவதி அங்கு வந்ததும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திம்மப்பா ரேவதியை கத்தியால் குத்திவிட்டு கை, கால்களை கட்டி எரித்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திம்மப்பாவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? வேறு யாரேனும் அவருக்கு உதவினார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    பெண்ணை கள்ளக்காதலன் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×