search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவியே தெரியாத அளவுக்கு நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்
    X
    திற்பரப்பு அருவியே தெரியாத அளவுக்கு நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்

    குமரியில் 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அதிலும் யாஸ் புயல் காரணமாக நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்றும் கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

    கால்வாய்கள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

    கனமழையால் சாலைகளே தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையில் அதிகபட்சமாக மயிலாடியில் 236.2 மில்லி மீட்டர் (23 செ.மீ.) பதிவாகி இருந்தது.

    பேச்சிப்பாறை அணை

    குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று அதிகாலையில் சுமார் 10 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வந்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 44.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து 11,320 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

    இந்த உபரி நீரானது குழித்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருபுறமும் கரைபுரண்டோடுகிறது. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் தாழ்வான பகுதிகளில் புகுந்தது. இதே போல கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு ஆகிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. மேலும் கரையோர பகுதிகளில் உள்ள வாழை மற்றும் தென்னந்தோப்புகளிலும், வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதே போல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 4 அடி வரை உயர்ந்து நேற்று காலை 71 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 71 அடியை தாண்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதேபோல நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது.

    யாஸ் புயல் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் ராமேசுவரத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பாம்பன் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் நங்கூரகயிறுகள் அறுந்து பாம்பன் குந்துகால் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒன்றோடொன்று மோதி கரை ஒதுங்கி கிடந்தன. பலத்த காற்றால் 10-க்கும் மேற்பட்ட படகுகள் பலத்த சேதம் அடைந்து இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×