search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மனநலம் பாதித்த இளம்பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று பலாத்காரம்- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

    திருச்சி அரசு மருத்துவமனை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் அழைத்து சென்று 5 நாட்களாக பலாத்காரம் செய்தது. கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி அரசு மருத்துவமனையை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 15 நாட்களாக 28 வயது இளம்பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி திரிந்து உள்ளார்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஓட்டல் வாசலில் நேற்று அதிகாலை மயக்கமான நிலையில் ஆடைகள் களையப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் அந்த இளம்பெண் கிடந்துள்ளார். ஓட்டலில் வேலை பார்க்கும் சமையல் மாஸ்டர் கார்த்திக் என்பவர் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அருகில் யாராவது இருக்கிறார்களா? என சுற்றி பார்த்தபோது ஒரு ஆட்டோவில் 4 பேர் மதுபோதையில் இருந்தனர். அவர்களை நோக்கி கார்த்திக் சென்றபோது, போதை ஆசாமிகள் சுதாரித்து கொண்டு அங்கிருந்து ஆட்டோவை ஓட்டியபடி வேகமாக சென்று விட்டனர். பின்னர் அந்த இளம் பெண்ணிற்கு சாலை ஓரத்தில் வசித்து வரும் சிலர் மாற்று உடைகளை கொடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதைத்தொடர்ந்து சமையல் மாஸ்டர் கார்த்திக் தனது நண்பரான ஆம்புலன்ஸ் டிரைவர் இலியாஸ் மூலம், இதுகுறித்து மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து புத்தூர் அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருச்சி அருகே உள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், கடந்த 5 நாட்களாக இரவு வேளையில் 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மீண்டும் அதே இடத்தில் விட்டு செல்வதை வழக்கமாக கொண்டது தெரியவந்தது.

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இந்த அளவிற்கு கொடுமை செய்துள்ள கும்பலை அரசு மருத்துவமனை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×