search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    குழந்தைகளுக்கு சாக்லேட்டுக்கு பதில் கருப்பட்டியை கொடுங்கள்- தெலுங்கானா கவர்னர் தமிழிசை அறிவுரை

    குழந்தைகளுக்கு சாக்லேட்டுக்கு பதில் கருப்பட்டியை கொடுங்கள் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    சென்னை:

    செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். இதையொட்டி தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கருப்பட்டியை கையில் வைத்தபடி ஊட்டச்சத்து குறித்த ஒரு வீடியோவை பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்த மாதம் ஊட்டச்சத்து மாதம். ஊட்டச்சத்து உள்ள பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய மாதம். அதனால் நான் கருப்பட்டியை வைத்து சொல்கிறேன். இந்த கருப்பட்டியை ‘கற்பக கட்டி’ என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இதில் சத்து இருக்கிறது.

    எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் இருக்கிறது. இளமையை தருவதற்கு ‘ஆண்டி ஆக்சிடஸ்’ என்ற பொருள் உள்ளது. ரத்த சோகையை குணப்படுத்த இரும்புச்சத்தும் இதில் இருக்கிறது. ஆக குழந்தைகளுக்கு கூட ‘சாக்லேட்’டுக்கு பதிலாக கருப்பட்டியை கொடுக்கும்போது, அவர்கள் ரத்தசோகை இல்லாமல் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வளருவார்கள்.

    கர்ப்பிணி பெண்களுக்கு இதை கொடுக்கும்போது அவர்கள் ரத்தசோகை இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். இந்த கருப்பட்டியின் பலனை தெரிந்து கொள்வோம். இதை பயன்படுத்துவோம். குறிப்பாக சர்க்கரைக்கு பதிலாகவும் இதை பயன்படுத்தினால் அதிக பலன் தரும். கருப்பட்டியை தெரிந்து கொண்டோம். ஊட்டச்சத்து பெறுவோம். பயன்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×