search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா?- சமூக வலைதளத்தில் வைரலான ஆட்டோ டிரைவர் வீடியோ

    பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா? என்றும் அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன் என்றும் ஆட்டோ டிரைவர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
    மதுரை:

    மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை இணையதளத்தில் ஒரு வீடியோவாக பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முத்துகிருஷ்ணன் பேசிய விவரம் வருமாறு:-

    கொரோனா ஊரடங்கினால் தற்போது யாருக்கும் வேலை இல்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தநிலையில் ஒரு பெண் பிரசவ வலியால் துடிக்கிறார். அவரை ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டும் என்று மூதாட்டி ஒருவர் என்னை அழைத்தார். அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணிகளை எனது ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் அதற்காக வாடகை வாங்குவதில்லை. அதுபோல இந்த பெண்ணிடமும் வாடகை வாங்க மறுத்துவிட்டேன். அங்கிருந்து கோரிப்பாளையம் சிக்னல் அருகில் வந்தபோது போலீசார் என்னை தடுத்து நிறுத்தி ரூ.500 அபராதம் விதித்து, அதற்கான ரசீதை கொடுத்தனர். நான், கர்ப்பிணியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து விட்டுவிட்டு திரும்பியதை கூறியும், அவர்கள் காதில் வாங்கியதாக தெரியவில்லை. ஆட்டோ டிரைவர்கள் பெரிய பணக்காரர்கள் இல்லை. சட்டம் மக்களை காக்கவா இல்லை, புதைகுழியில் புதைக்கவா. மனவேதனையில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன். இதனை மனிதநேயம் உள்ள போலீஸ் அதிகாரிகள் பார்த்தால் கொஞ்சமாவது தயவு காட்டுங்கள்.

    இவ்வாறு பேசியிருந்தார்.

    இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளின் வாட்ஸ்- அப் குரூப்பில் பதிவு செய்தார். அந்த வீடியோவை பார்த்து விட்டு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா சம்பவம் நடந்த இடம் மற்றும் விவரம் குறித்து உடனே கேட்டறிந்தார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராத தொகையை உடனே ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போலீஸ் கமிஷனரின் துரித நடவடிக்கையை அறிந்த அனைவரும் பாராட்டினர். 
    Next Story
    ×