search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரி புனரமைக்கும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    X
    ஏரி புனரமைக்கும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏரிகள் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு- கலெக்டர் ஆய்வு

    வெறையூர், அழகானந்தல் கிராமங்களில் உள்ள ஏரிகள் ரூ.1 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார்.
    வாணாபுரம்:

    தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையைச் சார்ந்த ஏரிகளில் அந்தந்தப் பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-2021ம் ஆண்டில் ரூ.31 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 59 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    அதன்படி திருவண்ணாமலை மத்திய பெண்ணை ஆறு வடிநில கோட்டம் மூலமாக 54 ஏரிகள் ரூ.28 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநில கோட்டம் மூலமாக வெம்பாக்கம் தாலுகாவில் 5 ஏரிகள் ரூ.2 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குடிமராமத்துப் பணிகள் நீரினை பயன்படுத்தும் சங்கங்கள் மூலமாக நியமன முறையில் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வீணாவதைத் தடுத்து தண்ணீரினை சேமித்து, பாசன உறுதியளித்து, நீர்ஆதாரம் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருவண்ணாமலை தாலுகா வெறையூர் கிராமத்தில் உள்ள ஏரியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டிலும், அழகானந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் ரூ.53 லட்சத்த 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்தப் பணியை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அனைத்துப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் ஏ. சுப்பிரமணியன், அரசு அலுவலர்கள், பாசன சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    இப்பணிகள் மூலம் இந்த ஏரிகளில் உள்ள மதகுகள் சீரமைத்தல், கோடிகள் புனரமைத்தல், ஏரிக்கரை பலப்படுத்துதல், நீர்வரத்துக் கால்வாய் தூர்வாருதல் மற்றும் ஏரியின் எல்லைகள் அளந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இதன் மூலம் வெறையூர் ஏரிக்கு உட்பட்ட 121 ஏக்கர் மற்றும் அழகானந்தல் ஏரிக்கு உட்பட்ட 102 ஏக்கர் என மொத்தம் 223 ஏக்கர் விவசாய நிலங்கள் கூடுதல் பாசனம் பெற்று பயன் அடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×