search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடையம் அருகே கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடைய மகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார் குறிச்சியை அடுத்துள்ள கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 52). இவர் மோட்டார் சைக்கிளில் கடை கடையாக சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (47). இவர் பொட்டல்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜோதி என்ற மகளும், ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். ஜோதி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ஆரோக்கிய ஸ்ரீதர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சந்தானம் கடந்த 1 மாதத்திற்கு முன்பு வி.கே.புரம் சந்தன மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தார். தற்போது கீழஆம்பூரில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆரோக்கிய ஸ்ரீதர் ஆன்லைன் வர்த்தகத்திலும் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததில், அதிலும் அவருக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தானம், லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகிய 3 பேரும் நேற்று அதிகாலையில் வி‌ஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடியபடி மயங்கி கிடந்ததை பார்த்து சந்தானத்தின் மகள் ஜோதி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கதறி அழுதார். அவரது அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்தானம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று காலை சந்தானத்தின் மனைவி லட்சுமியும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். சந்தானத்தின் மகன் ஆரோக்கிய ஸ்ரீதருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×