search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி

    ராஜபாளையம் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள தேவதானத்தில் அரசு விதைப் பண்ணை உள்ளது. இதன் அருகே சாலையோரம் இருந்த சுமார் 15 அடி பள்ளத்தில் 2 வாலிபர்கள் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

    அந்த வழியே இன்று காலை சென்றவர்கள் இதனைப் பார்த்து சேத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. அது அங்குள்ள பனை மரத்தில் மோதியிருப்பதும் தெரியவந்தது.

    எனவே பலியான 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பலியான 2 பேரும் நெல்லை மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த ராஜகுரு (வயது 21), ஸ்டாலின் (17) என தெரியவந்தது.

    அவர்கள் 2 பேரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தனர். அவர்கள் கட்டியிருந்த கைக்கடிகாரம் 3.30 மணியில் நிற்கிறது.

    எனவே அந்த நேரத்தில் தான் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×