search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு: சென்னை ரெயில்கள் தாமதம்
    X

    செங்கல்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு: சென்னை ரெயில்கள் தாமதம்

    செங்கல்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னை வரும் ரெயில்கள் தாமதமானது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. காலை 8.40 மணி அளவில் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருந்தது.

    இதையடுத்து மின்சார ரெயிலை நடுவழியில் டிரைவர் நிறுத்தினார். மேலும் சிக்னல் கோளாறு குறித்து செங்கல்பட்டு ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும் வழியிலேயே அந்தந்த ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    இதேபோல் சென்னை நோக்கி சென்ற அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்து சென்றனர். பெண்களும், முதியவர்களும் இறங்க முடியாமல் ரெயிலிலேயே அமர்ந்து இருந்தனர்.



    மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பஸ்களில் பயணம் செய்தனர். இதனால் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கேபிள் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் சிக்னல் கோளாறு சீரமைக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு பின்னர் ரெயில் சேவை சீரானது.
    Next Story
    ×