search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியின் கணவரை கொல்ல முயன்ற சென்னை என்ஜினீயர் கைது
    X

    காதலியின் கணவரை கொல்ல முயன்ற சென்னை என்ஜினீயர் கைது

    பார்சலில் வி‌ஷம் கலந்த மதுவை அனுப்பி காதலியின் கணவரை கொல்ல முயன்ற சென்னை என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த சாத்து மதுரையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி ஊழியர். இவரது வீட்டுக்கு செங்கல்பட்டு முகவரியில் இருந்து கடந்த 26-ந்தேதி கூரியரில் பார்சல் ஒன்று வந்தது.

    பார்சலை சதீஷ்குமாரின் தாயார் வாங்கினார். அதனை, சதீஷ்குமார் வந்தவுடன் அவர் கொடுத்துவிட்டார். பார்சலை வாங்கி பிரித்து பார்த்ததில், வெளிநாட்டு மதுபான வகையான ‘ரெட்லேபிள்’ விஸ்கி பாட்டில் இருந்தது.

    விஸ்கி மதுவை தீபாவளி பண்டிகை நாளில், சதீஷ் குமார் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரும் ஆட்டோ டிரைவருமான வசந்தகுமாருடன் சேர்ந்து குடித்தார். மது குடித்த அடுத்த சில நிமிடங்களில் 2 பேரும் வாந்தி எடுத்தனர்.

    இதையடுத்து கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். உடனடியாக அக்கம், பக்கத்தினர் சதீஷ் குமார், வசந்தகுமாரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பார்சலில் வந்த மதுவில் பூச்சி மருந்து கலந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    மோனோ குரோட்டோ பாஸ் என்ற வகை பூச்சி மருந்தை மது பாட்டில் மூடியில் துளையிட்டு, ஊசி மூலமாக உள்ளே செலுத்தி உள்ளனர். பிறகு, அந்த துளையை மெழுகு மூலம் மூடி மறைத்துள்ளனர்.

    எனவே, வி‌ஷம் கலந்த மதுவை கொடுத்து சதீஷ்குமாரை யாரோ? கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. போலீசார், பார்சல் அனுப்பிய கூரியர் நிறுவனத்துக்கு சென்று விசாரித்தனர். பார்சல் அனுப்பிய முகவரி போலி என தெரிந்தது.

    இதையடுத்து, கூரியர் நிறுவன சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பார்சலை கொடுத்த வாலிபரை போலீசார் பிடித்தனர்.

    பிடிபட்ட நபர், புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பது தெரியவந்தது. அதே சமயம், சதீஷ்குமாரின் மனைவி கவுதமியின் செல்போன் எண்ணையும் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

    கவுதமி செல்போனுக்கு ஒரு எண்ணில் தொடர்ந்து அதிக அழைப்புகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் எண்ணை கண்டறிந்து தொடர்பு கொண்டபோது, பிடிபட்ட விநாயகமூர்த்தியுடையது என தெரியவந்தது.

    விநாயகமூர்த்தியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில், பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. புதுச்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். படித்தவர்.

    கல்லூரி காலத்தில், வேலூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட விழா ஒன்றில் கவிதை போட்டியில் கலந்து கொள்வதற்காக விநாயக மூர்த்தி வந்தார். அந்த விழா, ஒருங்கிணைப்பாளராக கவுதமி இருந்தார்.

    அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பிறகு, ஆஸ்பத்திரி ஊழியரான சதீஷ்குமாரின் காதல் வலையில் சிக்கிய கவுதமி ஊரறிய முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு முன்னால் காதலன் விநாயக மூர்த்தியுடன் கவுதமி பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் மீண்டும் நெருக்கமானார்.

    அப்போது தன்னுடன் வந்துவிடும்படி விநாயக மூர்த்தி கவுதமியை அழைத்தார். அதற்கு கவுதமி மறுத்துள்ளார். இதனால் சதீஷ்குமாரை கொன்று விட்டு கவுதமியை முழுவதுமாக அபகரிக்க விநாயக மூர்த்தி திட்டம் வகுத்தார்.

    அதன்படி, மதுவில் வி‌ஷம் கலந்து பார்சலில் சதீஷ்குமாருக்கு அனுப்பியதாக போலீசாரிடம் விநாயக மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, விநாயக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விநாயக மூர்த்தி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.

    இந்த வழக்கில் கவுதமிக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×