search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தாலும், நீர்வரத்தை விட தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    மேட்டூர்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்தது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்பிக்க உயர்மட்ட தொழில் நுட்பக்குழுவை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்றும், அந்த குழு ஆய்வறிக்கையை கோர்ட்டில் சமர்பிக்கவும் உத்தரவிட்டது.

    இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் தமிழக மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை கடந்த 4-ந் தேதி வந்தடைந்தது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் காலையில் அணைக்கு வினாடிக்கு 4,013 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4,615 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து பாசன தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நீர்வரத்தை விட அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    நேற்று முன்தினம் 74.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 73.94 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் தொடர்ந்து திறந்துவிடப்படும் நிலையில், பருவமழை கை கொடுத்தால் மட்டுமே இந்த ஆண்டு பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
    Next Story
    ×