search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தயரன்
    X
    தயரன்

    கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    சென்னை கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் மெல்வின். இவருடைய மகன் தயரன் மைக்கேல் முடாரி (வயது 23). இவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தயரன் மின்சார ரெயில் மூலம் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்.

    நேற்று அவர், சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் மின்சார ரெயில் மூலம் கோட்டூர்புரம் மின்சார ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவருடன் ஒரு இளம்பெண்ணும் வந்தார். இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

    அப்போது எதிரே வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று தயரனை சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கினர். கண்முன்னே தயரன் கத்தியால் தாக்கப்படுவதை பார்த்த அந்த இளம்பெண் ‘அய்யோ... காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’, என்று அதிர்ச்சியில் கூச்சலிட தொடங்கினார்.

    காலை நேரத்தில் கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டுவதை பார்த்த பிற பயணிகள் கலவரம் அடைந்து சிதறி ஓடினர். ஒரு சிலர் காப்பாற்ற முன்வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் தாங்கள் வந்த காரியத்தை முடித்து விட்டு, தப்பி ஓடிவிட்டனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் முகம், தலை, கால் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் தயரன் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தயரனை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கடந்த மாதம் ஐதராபாத்துக்கு கல்வி சுற்றுலா சென்றபோது தயரனுக்கும், அவரது தோழி ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. பேராசிரியர்கள் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தயரனின் செல்போனுக்கு, மர்ம நபர் ஒருவர் பேசி, ‘உன்னை விரைவில் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதை கல்லூரி முதல்வரிடம் தயரன் தெரிவித்தார். அப்போது அவர் அறிவுரையின்பேரில், தயரன் சில நாட்கள் கல்லூரிக்கு வராமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தார்.

    இந்தநிலையில் கல்லூரி செல்ல முடிவெடுத்து தயரன் நேற்று வீட்டை விட்டு புறப்பட்டார். அவருடன் படிக்கும் தோழியும் உடன் சென்றார். கோட்டூர்புரம் ரெயில் நிலையத்துக்கு அவர்கள் வந்ததும், மர்ம நபர்கள் 2 பேர் கத்தியால் தயரனை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்களை நாங்கள் வலைவீசி தேடி வருகிறோம்.

    இந்த விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து தயரனுடன் தகராறில் ஈடுபட்ட அந்த மாணவியிடமும், கல்லூரி பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×