search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: தமிழ்நாடு அணியை 87 ரன்னில் சுருட்டியது மும்பை
    X

    ரஞ்சி டிராபி: தமிழ்நாடு அணியை 87 ரன்னில் சுருட்டியது மும்பை

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. மும்பை அணிக்கெதிரான இன்றைய போட்டியில் தமிழ்நாடு அணி 87 ரன்னில் சுருண்டது.
    இந்தியாவின் முன்னணி முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியின் 2016-17-ம் ஆண்டுக்கான தொடர் இன்று தொடங்கியது. குரூப் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - மும்பை அணிகள் ரோஹத் மைதானத்தில் மோதின. நான்கு நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாட்டின் வாஷிங்டன் சுந்தர், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வாஷிங்டன் சுந்தர் 2 ரன்னிலும், முகுந்த் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    அதன்பின் வந்த பாபா அபரஜித் 16 ரன்னும், விக்கெட் கீப்பர் முரளி கார்த்திக் 15 ரன்னும் எடுத்தனர். அதற்குப்பின் வந்த வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்கள். இதனால் 45.3 ஓவர்கள் விளையாடிய தமிழ்நாடு அணி 87 ரன்னில் சுருண்டது.

    பாபா இந்திரஜித் மட்டும் 28 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தமிழ்நாடு அணியின் 8 வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 பேர் டக்அவுட் ஆனார்கள். மும்பை அணியின் குல்கர்னி, தேஷ்பாண்டே ஆகியோர் தலா நான்கு விக்கெட்டும், பல்வீந்தர் சந்து 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. கவுஸ்டப் பவார் 26 ரன்னுடனும், விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ஆதித்யா தாரே 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×