search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...
    X

    கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

    • எச்.டி.எல். எனப்படும் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் உடலினை காக்கிறது.
    • எல்.டி.எல். எனப்படும் பிரிவு ரத்த குழாய் அடைப்புகளுக்கு காரணம் ஆகின்றது.

    நம்முடைய ரத்தக் குழாய்கள்தான் ஆக்சிஜன் நிறைந்த, சத்துக்கள் நிறைந்த ரத்தத்தினை உடலின் ஒவ்வொரு திசுவிற்கும் கொண்டு செல்கின்றன. ஆக்சிஜன் மிகவும் குறைந்த ரத்தத்தினை சீர் செய்ய இருதயத்திற்கு கொண்டு வருகின்றன.

    ஆர்டரீஸ், வெயின்ஸ் என்று இவை பிரிந்து கூறப்பட்டாலும் ரத்த குழாய்கள் மூலம் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம், ஊட்டம் பெறுகின்றது. கழிவுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. இது நமது உடலின் போக்குவரத்துப் பிரிவு இதில் இந்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் எத்தனை பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா? அடைப்பு ஏற்படும் இடத்திற்கு ஏற்ப பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    பக்க வாதம், மாரடைப்பு இவை இரண்டும் நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தைகள்தான். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ஏற்படும் இத்தகு பிரச்சினைகள் நிறைய உள்ளன.

    கொலஸ்ட்ரால்- வழு வழுப்பான இந்த கெலஸ்டிரால் நமது கல்லீரலால் உருவாக்கப்படுகின்றது. இதற்கு பல முக்கிய வேலைகள் நம் உடலில் உள்ளன. இந்த கொலஸ்ட்ரால் தண்ணீரில் கரையாது. இதனை உடலில் எடுத்து செல்ல லைப்போ புரோடின் என்ற துகளின் உதவியோடு செல்கின்றது.

    எச்.டி.எல். எனப்படும் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் உடலினை காக்கிறது. எல்.டி.எல். எனப்படும் பிரிவு ரத்த குழாய் அடைப்புகளுக்கு காரணம் ஆகின்றது.

    உயர் ரத்த அழுத்தம், வயது, சர்க்கரை நோய், மது, புகைபழக்கம் இவற்றினையும் கொலஸ்ட்ரால் பரிசோதனையுடன் சேர்த்து மருத்துவர் ஆய்வார். எல்.டி.எல்., எப்.டி.எல் இரு பிரிவும் குறிப்பிட்ட அளவுடன் இருப்பதே நல்லது.

    எல்.டி.எல். அதிகப்படும் போது ரத்த குழாய்களின் உள் அமர்ந்து அடைப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த அடைப்பு சிறு சிறு துகள்களாகி மற்ற இடங்களுக்கும் செல்லலாம்.

    * அதிக வெண்ணை, பால் சார்ந்த உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவு, இவை காரணம் ஆகலாம்.

    * எடை அதிகம் இருத்தல். இடுப்பு, வயிறு பருத்து இருத்தல்.

    * உடல் உழைப்பு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், புகை பிடித்தல், சர்க்கரை நோய் இவை கொலஸ்ட்ரால் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    * மாதவிடாய் நிறை பெண்கள்.

    * 45 வயதினைக் கடந்த ஆண்கள்.

    * பரம்பரை உடல் அதிக எடையும் கொலஸ்ட்ரால் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    கொலஸ்ட்ரால் அதிகப்படும்போது நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நடக்கும் போது வலி போன்றவை ஏற்படலாம். மருத்துவ சிகிச்சையுடன் உடற்பயிற்சி, நீச்சல், நடைபயிற்சி இவற்றினையும் மருத்துவ ஆலோசனைபடி கடைபிடிக்க வேண்டும்.

    சர்க்கரை பாதிப்பு என்றால் ஏன் மிக அதிக கவனம் கொடுக்கப்படுகின்றது. தொடர்ந்து அதிக சர்க்கரை ரத்தத்தில் இருக்கும் போது உடலில் சிறுநீரகம், ரத்த குழாய்கள், நரம்புகள், கண்கள் என பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. சர்க்கரை அளவு மாறுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    * உடல் உழைப்பு, உடற்பயிற்சி என எதுவும் இல்லாமல் இருப்பது எந்த மருந்து சாப்பிட்டாலும் கட்டுப்பாட்டில் வராது இருக்கும்.

    * அதிக மன உளைச்சல், சர்க்கரை அளவினை உயர்த்தி விடும்.

    * வைரஸ் பாதிப்பு, தேவையான அளவு நீர் குடிக்காது இருத்தல்.

    * சில ஸ்டீராய்டு பிரிவு மருந்துகள்.

    * அதிக மருந்தினை சர்க்கரையின் அளவு குறையும் போது அளிப்பது (மருத்துவர் சொல்படி உணவு கொடுப்பது நல்லது)

    * மருந்தினை முறையாய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.

    இப்படி சில காரணங்களை குறிப்பிட்டாலும் சில அறிகுறிகள் கூறுவதனை நாம் ஒதுக்காது கவனிக்க வேண்டும்.

    * அடிக்கடி சிறுநீர் செல்லுதல், சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியாமை. வறண்ட வாய், தொடர்ந்து நோய்கள், காயங்கள் மெதுவாய் ஆறுதல். வயிறு பிரச்சினைகள், தொடர்ந்து சோர்வு, அதிக தாகம்.

    * வயிற்று கொழுப்பு அதிகமாய் இருத்தல். நரம்பு பிரச்சினைகள் போன்றவற்றினை உடனடியாக கவனிக்க வேண்டும். உணவில் கவனம் செலுத்தும் பழக்கம் மட்டும் போதாது. மேற்கூறிய அறிகுறிகளையும் கவனிக்க வேண்டும்.

    சிறுநீரகம்: உடலின் கழிவுப் பொருட்களை ரத்தத்தில் இருந்து பிரித்து வெளியேற்றுவதில் இரண்டு சிறுநீரகங்களும் ஆற்றும் பங்கு மிகவும் பெரிது. இதன் நன்மைகளை இன்னமும் நிறைய சொல்லலாம். இவை சரிவர இயங்காவிடில் மனிதன் பல அவதிகளுக்குள்ளாகிறான். அப்படிப்பட்ட சிறுநீரகம் சற்று சரியாக இயங்காத போது சில அறிகுறிகளை நன்கு வெளிப்படுத்தும். அவைகளை நன்று அறிந்து ஆரம்ப காலத்திலேயே நம்மை நாம் சரி செய்து கொள்ள வேண்டும்.

    சோர்வு: ஆரோக்கியமான சிறுநீரகம் 'எரித்ரோபாய்டின்' என்ற ஹார்மோனை சுரக்கும். இது சிகப்பு பிளேட் லெட்ஸ் எண்ணிக்கையினை சீராய் வைக்கும். இந்த சிகப்பு பிளேட் லெட்ஸ் எண்ணிக்கை குறையும் போது சதைகளில் பலவீனம், செயல்பாட்டில் பலவீனம் என்று ஆகிவிடும். இதுபோல் இருக்கும் போது மருத்துவரிடம் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரும்பு சத்து குறைபாடு இருக்கும் பொழுதும் இவ்வாறு இருக்கும்.

    * பின் கீழ் முதுகில் வலி, பொறுக்க முடியாத வலி, சிறுநீர் வெளி செல்வதில் பிரச்சினை.

    * கவன குறைவு, ஞாபகக்குறைவு, தலை சுற்றல்.

    * பசியின்மை, நாக்கில் ஒருவித உலோக சுவை போன்று இருத்தல்.

    * சரும அரிப்பு, சரும பிரச்சினை.

    * மூச்சு விடுவதில் சிரமம்.

    * வீக்கம். குறிப்பாக உப்பியது போன்ற முகம்.

    * சிறுநீரில் பலவித மாற்றங்கள்.

    இவை அனைத்துமே நாம் சிறுநீரகத்தின் உடனடியாக கவனிக்க வேண்டும் என்று கூறுபவை ஆகும்.

    இருதய நோய் பாதிப்பு சருமத்திலும் வெளிப்படும்

    இருதய நோய் இருந்தால் உங்கள் சருமத்திலும் நகத்திலும் வெளிப்படும்.

    இருதய நோய் பாதிப்பு பாதம், கீழ்காலில் திரவ சேர்க்கையினை உருவாக்கலாம். இந்த வீக்கம் தொடை, தொடை மடிப்பு வரைக்கூட செல்லலாம்.

    ரத்தத்தின் மூலம் தேவையான ஆக்சிஜன் கிடைக்காத பொழுது அந்த இடம் 'சில்' என்றும் நீலநிறமாகவும் மாறக்கூடும். இது ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் நிகழ்கின்றது.

    மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் மிகச்சிறிய கட்டி போன்ற உருவாக்கம் உடலில் எந்த இடத்திலும் தோன்றலாம். வலியற்ற இவை கண்களின் ஓரத்தில், உள்ளங்கை, பின்கீழ் கால்களில் சாதாரணமாக காணப்படலாம். உடலில் ஆரோக்கியமற்ற அதிக கொலஸ்ட்ரால் இருப்பதனை இவை கூறுகின்றன. மருத்துவர் மூலம் உடனடி கொலஸ்ட்ரால் குறைய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சிலருக்கு இதுபோன்று சிறியதாய் பல கட்டிகள் அடர்ந்து கூட இருக்கலாம்.

    நகங்கள் உப்பியது போன்றும் நுனியில் வளைந்தும் இருக்கலாம்.

    சிகப்பு, ஊதா கோடுகள் போன்று நகத்தின் உள் இருக்கலாம்.

    பாதவிரல்களின் கீழ் வலியுள்ள உப்பிசங்கள் ஏற்படலாம். பிரவுன் (அ) சிகப்பு நிற மாறுதல் பாதம். உள்ளங்கையில் இருக்கலாம்.

    சிறு குழந்தைக்கு உதடு அதிகம் வறண்டு, மாறுபட்டு ரத்த கசிவும் இருந்தால், பிற்காலத்தில் இருதய நோய் பாதிப்பு ஏற்படாது இருக்க மருத்துவ அறிவுரை அவசியம். ருமாடிக் ஜுரம் குழந்தைக்கு ஏற்பட்டால் இருதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    நாக்கில் வீக்கம், சிவந்து இருத்தல் போன்றவைகளும் கவனிக்கப்பட வேண்டியவையே.

    இவற்றினையும் தெரிந்து கொள்வோம்...

    மாரடைப்பு நோய் வராமல் இருக்க இரவில் அதிக நேரம் விழித்திருப்பது கூடாது. சிலர் மாலை நேரம் கடந்து அதிக உடற்பயிற்சிகள் செய்வார்கள். இந்த அதிகம் வேண்டாம். காலையில் 5-6 மணிக்குள் எழுந்தாலே சரிதான்.

    திங்கள் காலையிலும் வெள்ளி இரவிலும் உலகளவில் மாரடைப்பு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சனி, ஞாயிறு அன்று அதிகம் குடித்தலும், திங்கள் முதல் வெள்ளி வரை மிக அதிகமாக உழைத்தலும் இதற்கு காரணம் என்கின்றனர்.

    தவிர்த்து விடுவோமே!

    சிறிய தகவல்கள்:

    காலை உணவினை மறுப்பவர்களின் வயிறு அவர்மீது கவலை கொள்கின்றது. காலை உணவினை எடுத்துக் கொள்ளாவிடில் நாள் முழுவதும் சோம்பலாகத்தான் இருப்பீர்கள். சோர்வாகத்தான் இருப்பீர்கள். இதனால் தான் எண்சான் உடம்பிற்கு வயிறும் பிரதானம் ஆகின்றது.

    குறைந்தது 8-10 டம்ளர் நீர் ஓர் நாளைக்கு அருந்தாவிடில் சிறுநீரகத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை அளிக்கின்றோம்.

    இரவு 11 மணிக்குள் தூங்கி சூரிய உதய(6-6.30)திற்குள் எழுந்திராவிட்டால் நம் பித்த நீர் பை சரிவர வேலை செய்வதில்லை. அதிக சில்லென்ற உணவும், அதிக நேரம் சென்று உண்ணுதலும் சிறுகுடலுக்கு தொந்தரவினைக் கொடுக்கின்றது.

    மசாலா, அதிக உப்பு, காரம், எண்ணெய், பொரித்த உணவுகள் இவற்றினால் குடலே பழுதடைகின்றது.

    புகை, மாசு நிறைந்த காற்று இவற்றால் நுரையீரல் பாதிக்கப்படுகின்றது.

    அதிகம் பொரித்த மற்றும் கொழுப்பு உணவுகளால் கல்லீரல் பாதிப்படை கின்றது. அதிக சர்க்கரை உணவு கணையத்திற்கு பாதிப்பாகும். அதிக நேர டி.வி., கம்ப்யூட்டர் இவை கண்களை நோயாளி ஆக்குகின்றன.

    அழிவுப் பூர்வமான எண்ணங்கள் மூளையை அழிக்கும் ஆயுதம் ஆகும்.

    இப்படி ஒரு வெளிநாட்டு ஆய்வாளர் எழுதியிருந்த ஒரு குறிப்பினை சமீபத்தில் படித்தேன். பகிர்ந்தும் கொள்கிறேன். இன்றைக்கு வைட்டமின் டி3 பற்றி கருத்தில் கொள்ளாத மருத்துவம் இல்லை. எலும்பு பாதுகாப்பு என்பதில் ஆரம்பித்த இதன் பலன் இருதய பாதுகாப்பு, நரம்பு பாதுகாப்பு, அலர்ஜி பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தி என பல விதங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.

    D3 குறைபாடு காட்டும் சில அறிகுறிகள்:

    சதை பிடிப்பு, சதைவலி, மூட்டு இறுக்கம், மனச்சோர்வு, வறண்ட சருமம், தலைமுடி கொட்டுதல் போன்றவையாகும். இதற்கு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பொதுவில் மீன் எண்ணெய், மீன் உணவு என கூறப்பட்டாலும் மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை ஏற்பதே முறையானதாகும். ஆக அன்றாட வாழ்வில் தவிர்க்க வேண்டியது, கடைபிடிக்க வேண்டியது இவற்றினை சரியாய் செய்தாலே ஆரோக்கியம் கூடும்.

    Next Story
    ×