என் மலர்tooltip icon

    இந்தியா

    • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.
    • ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது , அவர் அலட்சியமாக, "இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீர்ஜா மோடி என்ற பிரபல பள்ளி இயங்கி வருகிறது.

    கடந்த நவம்பர் 1 ஆம் தேதி பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் அமய்ரா 9 வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அமய்ரா மாடியில் இருந்து குடித்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அமய்ரா கடந்த 1 வருடமாக சக மாணவர்களால் பாலியல் வக்கிரத்துடன் மோசமான வார்த்தைகளால் வாய்மொழியாக துன்புறுத்தப்பட்டு வந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    1 வருடதிற்கு முன்பு, "நான் பள்ளி செல்ல மாட்டேன்.. என்னை அனுப்பாதீர்கள்' என தன்னிடம் கூறியதை பதிவு செய்து அந்த ஆடியோவை அமய்ராவின் வகுப்பு ஆசியருக்கு தாயார் ஷிவானி மீனா அனுப்பி உள்ளார்.

    மேலும் தனது மகளின் அச்சம் குறித்து பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் அது அலட்சியம் செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

    அமய்ராவின் தந்தை விஜய் மீனா கூறுகையில், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பின் போது, சில மாணவர்கள் எனது மகளையும் மற்றொரு பையனையும் நோக்கி சைகைகளைச் செய்தனர். இது அமய்ராவை பயமுறுத்தி, தனது பின்னால் ஒளிந்து கொள்ள வைத்தது.

    ஆசிரியரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் அலட்சியமாக, இது ஒரு இருபாலர் பள்ளி, அவர்கள் ஆண்களிடமும் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்" என தெரிவித்தார்.

    தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அமய்ரா தனது வகுப்பு ஆசிரியரிடம் இரண்டு முறை சென்று பேசுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    இருப்பினும், சிபிஎஸ்இ விதிகளின்படி வகுப்பறை சிசிடிவிகளில் ஆடியோ பதிவு கட்டாயமாக இருந்தாலும், இந்த காட்சிகளில் எந்த ஒலியும் இல்லை. இதனால் அவர் ஆசிரியரிடம் என்ன பேசினார் என்பது தெரியவில்லை.

    ஆறு மாடி கட்டிடத்திற்கு குறைந்தபட்ச பாதுகாப்பாக கிரில் அல்லது வலைகள் ஏன் நிறுவப்படவில்லை? சிசிடிவி காட்சிகளில் ஏன் ஆடியோ இல்லை? லட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலிக்கும் நிர்வாகத்திற்கு எந்த பொறுப்பும் இல்லையா?" என்று அமய்ராவின் உறவினர் சாஹில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.  பெற்றோரிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக ஜெய்ப்பூர் டிசிபி ராஜர்ஷி ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.  

    • துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார்.
    • இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகைக்கடையில் மிளகாய் போடி தூய் நகையை திருட முயன்ற பெண்ணை கடைக்காரர் 20 முறை அறைந்த சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

    நவம்பர் 3 ஆம் தேதி அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது.

    துப்பட்டாவால் முகத்தை முழுவதுமாக மூடிய பெண் ஒருவர் நகைக்கடைக்கு வந்துள்ளார். அப்போது திடீரென கையில் மறைத்துவைத்திருந்த மிளகாய் பொடியை கடைக்காரர் மீது தூவி நகையை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

    மிளகாய் போடி கண்ணில் விழாததால் சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் அந்த பெண்ணை பலமுறை பலமாக ஆராய்ந்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட 25 வினாடிகளில் 20 முறை அப்பெண்ணை பளார் பளார் என்று அவர் அறைந்துள்ளார்.

    இது தொடர்பாக கடைக்காரர் புகார் கொடுத்த மறுத்த நிலையிலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட முயன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரி.
    • தவறுதலாக 2 கைகளிலும் மை வைத்துவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.

    இந்நிலையில் இந்த பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் 2 கைகளிலும் வாக்களித்ததற்கான மை இருந்தது சர்ச்சையாகியது. இது ஷாம்பவி இரண்டு முறை வாக்களித்தாரா என்ற கேள்வியை எழுப்பியது.

    சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி எம்.பி ஷாம்பவி சவுத்ரி வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்தபோது முதலில் தனது வலது கையை உயர்த்தி, மை பூசப்பட்ட விரலை வெளிப்படுத்தி, பின்னர் சிறிது நேரதில் இடது கையைக் காட்டினார். அந்த விரலிலும் மை அடையாளம் இருந்தது.

    இதன் வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்தபோது, வாக்குச்சாவடி அதிகாரி தவறுதலாக என் வலது கையில் மை பூசிவிட்டார், தலைமை அதிகாரி ஊழியர்களிடம் இடது கையில் பூசச் சொன்னார்.

    அதனால்தான் என் இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் உள்ளன. பெரிய தேர்தல்களின்போது இதுபோன்ற சிறிய நடைமுறை பிழைகள் சாதாரணம், இந்தப் பிரச்னையை அரசியல் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்தார்

    பாட்னா மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், "ஷாம்பவி வாக்களித்தபிறகு அவரது இரண்டு விரல்களிலும் மை அடையாளங்கள் இருப்பது தொடர்பான வீடியோ குறித்து வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மை அடையாளம் இடும் பணியில் இருந்த வாக்கு சாவடிப் பணியாளர் தவறுதலாக முதலில் வலது கையிலுள்ள விரலில் மை அடையாளம் இட்டார். பின்னர் தலைமை அதிகாரியின் தலையீட்டின் பேரில் இடது கையிலுள்ள விரலிலும் மை அடையாளம் இடப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ்- ஆர்ஜேடி வாக்கு மோசடி குறித்து குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    முன்னதாக பாஜக தலைவர்கள் சிலர் கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி தேர்தலிலும், தற்போது நடந்த பீகார் தேர்தலிலும் வாக்கு செலுத்திய புகைப்படங்களை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பகிர்ந்து வாக்கு மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

    • நாடு முழுவதும் 160 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.
    • உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்கள் மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி இன்று வாரணாசியில் நடந்த விழாவில் 4 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு மிக பெரிய காரணமாக உள்கட்டமைப்பு அமைந்து உள்ளது. ஒவ்வொரு நாடும் சாதனை படைக்கும் வகையில் வளர்ந்து இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் உள்கட்டமைப்பு மேம்பாடுதான் இருக்கிறது.

    உள்கட்டமைப்பு என்பது வெறும் பாலங்கள் கட்டுவதும், சாலைகள் அமைப்பதும் மட்டுமல்ல. ஒவ்வொரு பகுதியும் ஒருங்கிணைந்த வகையில் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதுதான் உள்கட்டமைப்பின் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்.

    அதனால்தான் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமான வளர்ச்சி பாதையில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு துணைபுரியும் வகையில் நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களும், வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களும் அமைந்துள்ளன. இது இந்தியாவை வேகமாக வளர செய்கிறது.

    தற்போது, இந்திய ரெயில்வேயில் வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் வகை ரெயில்கள் அடுத்த தலைமுறைக்கான ரெயில்களாக உருவெடுத்து உள்ளன. நாடு முழுவதும் 160 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 11 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் புதிய வளர்ச்சி பாதையை எட்டி இருக்கிறது.

    மற்ற மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. அவர்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் உத்தரபிரதேச மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்கள் மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாரணாசிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வருவதை ஒரு புதிய எழுச்சியாக மாற்றி உள்ளனர். வாரணாசியில் ஒருநாள் தங்கியிருந்து இறைவழிபாடு செய்வது ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.

    இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 4 வந்தே பாரத் ரெயில்களும் நாட்டின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும். இந்த ரெயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும். நேரத்தை கணிசமாக குறைக்கும். பனாரஸ்- கஜுர்கோ நகரங்களுக்கு இடையே விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில் வாரணாசி, பிரயாக்ராஜ், சித்தரகூட் போன்ற ஆன்மீக கலாச்சார நகரங்களை இணைக்கிறது.

    நாட்டின் வளர்ச்சியில் வந்தே பாரத் ரெயில்கள் புதிய மைல்கல்களாக இருக்கின்றன. தற்போது உத்தர பிரதேச மக்கள் தேவ் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தற்போது நடக்கும் விழாவை வளர்ச்சிக்கான திருவிழாவாகவும் கொண்டாடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தீ விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • லலிதா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி, அப்பன்னபாலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (வயது 66). இவர் தனது மகன் சுப்பிரமணிய சர்மா, மருமகள் லலிதா, பேர குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    ஜெயந்தி கனக மகாலட்சுமி தனது மருமகள் லலிதாவை தேவையில்லாமல் துன்புறுத்தி வந்துள்ளார். தன்னை அடிக்கடி துன்புறுத்தி வந்ததால் மாமியார் மீது கடும் கோபத்தில் இருந்தார்.

    மாமியாரை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என லலிதா முடிவு செய்தார். அதன்படி பாட்டிலில் பெட்ரோலை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து இருந்தார்.

    நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றனர். வீட்டில் லலிதா மற்றும் அவரது மாமியார் மட்டும் இருந்தனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட லலிதா அவரது மாமியாரை கயிற்றால் கட்டினார். இதுகுறித்து மாமியார் கேட்டபோது விளையாட்டுக்காக கட்டுவதாக தெரிவித்தார். பின்னர் கண்ணை கட்டினார். விபரீதம் நடக்கப் போவதை அறிந்த ஜெயந்தி கனக மகாலட்சுமி தன்னை ஒன்றும் செய்து விடாதே என மருமகளிடம் கெஞ்சினார்.

    இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த லலிதா வீட்டில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து மாமியார் மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பற்றியதால் ஜெயந்தி கனக மகாலட்சுமி வலியால் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் கணவருக்கு போன் செய்த லலிதா மாமியார் உடலில் எதிர்பாராதவிதமாக தீ பற்றி எரிந்து இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீ விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும் லலிதா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் மாமியார் தேவையில்லாமல் தன்னை துன்புறுத்தியதால் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தார்.

    போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து லலிதாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத் தொடரின்போது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தேவை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என கருதினர்

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல், இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அஞ்சலிக்கு அதே கிராமத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதை அறிந்த ராகுல் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அஜய்யுடன் நெருக்கம் காட்டி வந்தார்.

    கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறார் என அஞ்சலி அஜய்யிடம் கூறினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ராகுலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று அஜய், ராகுலை ஊருக்கு வெளியில் இருக்கும் வயல்வெளி பகுதிக்கு வாருங்கள் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது என்று அழைத்தார்.

    நடக்கப் போகிற விபரீதம் தெரியாமல் ராகுல் அவர் சொன்ன வயல் வெளிபகுதிக்கு சென்றார். அப்போது அஜய் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து ராகுலை 3 முறை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    உடனே அஜய் அவரது உடலை வயல் வெளியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அஞ்சலியும் எதுவும் தெரியாதது போல இருந்தார். தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக அவர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என கருதினர். மேலும் இது தொடர்பாக அஞ்சலியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. கிராமத்தினரிடம் விசாரித்த போது அஜய்யுடன் அவர் மாயமானது தெரியவந்தது.

    இதனால் இருவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அஜய்யை தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அஞ்சலியுடனான கள்ளக்காதலால் ராகுலை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக கள்ளக்காதல் விவகாரத்தால் தொடர்ச்சியாக பெண்கள் கணவரை கொலை செய்வது அதிகரித்து வருகிறது.

    தற்போது கொலை சம்பவம் அரங்கேறி உள்ள மீரட் மாவட்டத்தில் கடந்த மாதம் காஜல் என்ற பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றார். கணவருக்கு மயக்க மருந்து கொடுத்த அவர் கள்ளக்காதலனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் நீண்ட தூரம் சென்றனர்.

    பின்னர் ஒரு கால்வாய் அருகே கணவரை காஜல் தனது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து கணவர் உடலை கால்வாயில் வீசி விட்டு தப்பினார்.

    கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் சாஹித் என்ற கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் சவுரப்பை கொன்றார். அதன்பிறகு கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய டிரம்மில் அடைத்து சிமெண்டால் மறைத்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த ட்ரெண்ட் தொடங்கியது.
    • இந்த ட்ரெண்ட்-ஐ, இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் தொடங்கி வைத்தது.

    இணையத்தில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாகும். அந்த வகையில் 'Husky Dance' நடனம் இணையத்தில் ட்ரெண்டானது.

    'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ இணையத்தை கலக்கியது. பலரும் இதே மாதிரி நடனமாடி இணையத்தில் பதிவிட்டு இந்த ட்ரெண்டில் இணைந்தனர்.

    இந்நிலையில், 'Husky Dance' ட்ரெண்ட்-ஐ தொடர்ந்து தற்போது கார்ப்ரேட் நிறுவனங்களின் மன்னிப்பு கடிதம் சமூக வலைதளங்களில் புதிய ட்ரெண்ட்-ஆக மாறி வைரலாகி வருகிறது

    ஸ்கோடா, வோல்க்ஸ்வேகன், ரிலையன்ஸ், அதானி, PVR, மீஷோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நகைச்சுவையாக மன்னிப்பு கடிதங்களை பதிவிட்டு வருகின்றன.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடங்கிய இந்த ட்ரெண்ட்-ஐ, இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அத்வானி ஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
    • அத்வானி எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார்.

    பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உயர்ந்த தொலைநோக்குப் பார்வையும் அறிவுத்திறனும் கொண்ட ஒரு அரசியல்வாதியான அத்வானி ஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    அவர் எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார். அவரது பங்களிப்புகள் இந்தியாவின் ஜனநாயக மற்றும் கலாசார நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த 7-ந் தேதி முதல் ஆபரேஷன் பிம்பிள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குப்வாரா கெரான் சர்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இதன் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

    • திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் ஆகியோர் கூறியதாவது:-

    வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் நேரடியாக வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.

    ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்குதல் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குதல், சலுகை தரிசன டிக்கெட் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    வைகுண்ட தரிசன பாதையில் உள்ள கேமராக்கள் கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் பக்தர்களை கட்டுப்படுத்தி சிரமமின்றி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர். 26,535 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.
    • முன்பெல்லாம் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு குங்குமம் தயாரிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்காக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.

    இந்தநிலையில் சபரிமலை மற்றும் எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனைக்கு கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. எரிமேலியில் விற்பனை செய்யப்படும் ரசாயன குங்குமம் குறித்து சில கருத்துக்களை வக்கீல் ஒருவர் ஐகோர்ட்டில் முன் வைத்தார்.

    எரிமேலியில் பேட்டை துள்ளலில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடலில் பல வண்ண குங்குமபொடிகளை பூசிக் கொள்வார்கள். முன்பெல்லாம் மஞ்சள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு குங்குமம் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரசாயன குங்குமம் சந்தைகளில் முன்னணியில் உள்ளது.

    அந்த குங்குமத்தையே பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். பின்பு அவர்கள் ஷாம்பு மற்றும் சோப்புகளை அதிகளவில் பயன்படுத்தி ஆற்றில் குளிக்கிறார்கள். ஷாம்பு மற்றும் சோப்பு இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் கண்ட இடத்தில் வீசப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதையடுத்து சபரிமலை-எரிமேலியில் ரசாயன குங்குமம் மற்றும் ஷாம்பு-சோப்பு உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை விற்பனை செய்யதடை விதித்து ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

    மேலும் ரசாயன குங்குமம் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை தேவசம்போர்டு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்யவும் ஐகோர்ட் ஆணையிட்டது. இந்த விஷயத்தில் எரிமேலி பஞ்சாயத்து மற்றும் செங்கனூர் நகராட்சி ஆகியவை சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து ஆரோக்கியமான சூழலை உறுதி செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 12-ந்தேதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும், அப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    ×