search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனாவில் இறந்த முதியவர் உடலை மாற்றி கொடுத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு

    உடல்களை பரிசோதிக்காமல் மாற்றி வழங்கியதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை.

    மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுபோல கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. புதிதாக 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

    கொரோனாவால் பலியானவர்கள் உடல்கள் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 89 வயது முதியவர் ஒருவரும், வடக்கஞ்சேரி கும்பளம்பாடு பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரும் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

    இவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். 89 வயது முதியவரின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு முதலில் சென்றனர்.

    அவர்களிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடலை பிளாஸ்டிக் கவரால் மூடி ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட உறவினர்கள், உடனடியாக உடலுக்கு இறுதி சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர்.

    அதன்பின்பு 80 வயது முதியவரின் உறவினர்கள், அவரது உடலை வாங்க ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடலை திறந்து பார்த்த போது, அது 80 வயது முதியவர் இல்லை என தெரியவந்தது.

    அதன்பின்பு தான் முதலில் வந்தவர்களிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உடலை மாற்றி வழங்கியது தெரியவந்தது. இதை அறிந்ததும், அவர்களிடம் இருந்து உடலை வாங்க சென்ற போது அதற்குள் அவர்கள் உடலை அடக்கம் செய்திருந்தது தெரியவந்தது.

    இது பற்றி 80 வயது முதியவரின் உறவினர்கள் ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதையடுத்து உடல்கள் மாறியது எப்படி என்பது பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

    மேலும் உடல்களை பரிசோதிக்காமல் மாற்றி வழங்கியதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×