search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர்சிங்
    X
    பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர்சிங்

    ரூ.1,140 கோடி ஊழல் வழக்கு: பஞ்சாப் முதல்-மந்திரி, மகன்-மருமகன் விடுவிப்பு

    பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர்சிங், அவரது மகன் ரனீந்தர்சிங், மருமகன் ரமீநகர்சிங் ஆகியோரை ஊழல் வழக்கில் இருந்து லூதியானா நீதிமன்றம் விடுதலை செய்தது.
    லூதியானா:

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்- மந்திரியாக இருப்பவர் கேப்டன் அமரிந்தர்சிங்.

    அவர் தற்போது 2-வது முறையாக முதல் மந்திரியாக இருக்கிறார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை முதல் மந்திரியாக பதவி வகித்தார்.

    அப்போது அமரிந்தர்சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    லூதியானா நகரில் டெல்லியை சேர்ந்த நிறுவனம் ஒன்று மிகப்பெரிய வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியது. 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் 2006-ல் முடிந்தது. ரூ.1,140 கோடியில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு இந்த மிகப்பெரிய திட்டத்தை கொடுக்கும் வகையில் அமரிந்தர்சிங் சாதகமாக நடந்து கொண்டார் என்றும் இதில் ஊழல் நடந்து உள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர்சிங், அவரது மகன் ரனீந்தர்சிங், மருமகன் ரமீநகர்சிங் உள்பட 31 பேர் மீது மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் லூதியானா கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. முதல் மந்திரி அமரிந்தர்சிங், அவரது மகன், மருமகன் உள்பட 31 பேரையும் கோர்ட்டு விடுவித்தது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிபதி குர்பிர்சிங் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

    இது தொடர்பாக அமரிந்தர்சிங் கூறும் போது, 13 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்தது. தற்போது வழக்கு எங்களுக்கு சாதகமாக வந்து உள்ளது. எங்கள் மீதான குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது இப்போது தான் நிம்மதி அடைகிறோம் என்றார்.

    Next Story
    ×