search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தரிப்பு படம்
    X
    சித்தரிப்பு படம்

    சமரச பேச்சு தோல்வி - வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம்

    பொதுத்துறை வங்கிகள் இணைப்பு தொடர்பாக மத்திய அரசுடன் வங்கி பணியாளர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 3.5 லட்சம் பணியாளர்கள் நாளை வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
    புதுடெல்லி:

    10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்கும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இந்த நடவடிக்கையால் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த வங்கிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசின் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், வங்கிகள் இணைப்பைக் கைவிட்டு வாராக் கடனை வசூலிப்பதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கூறப்பட்டது.

    இந்த நிலையில் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்தும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார் மயமாக்கும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த செயலை கண்டித்தும் அகில இந்திய அளவில், அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

    நிர்மலா சீதாராமன்

    இந்த போராட்டத்தை தவிர்ப்பதற்காக மத்திய அரசின் தொழிலாளர்துறை ஆணையர் தலைமையில் டெல்லியில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதைதொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தவாறு நாளை காலை 6 மணி முதல் 22-ம் தேதி காலை 6 மணிவரை வேலைநிறுத்தம் நடைபெறும். மேற்கண்ட இரு சங்கங்களை சேர்ந்த சுமார் 3.5 லட்சம் பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டேபசிஷ் பாசு சவுத்ரி ஆகியோர் இன்று மாலை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×