search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்
    X
    பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்

    அரசு பஸ் ஊழியர்கள் பந்த்- தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

    தெலுங்கானாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலங்கானாவில் அரசு போக்குவரத்துக் கழகத்தை அரசுத் துறையாக அறிவிக்க வேண்டும், தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், சம்பள உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 5-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அவர்களை பணிக்குத் திரும்பும்படி அரசு வலியுறுத்தியது. இதற்காக காலக்கெடுவும் விதித்தது. அரசின் காலக் கெடுவுக்குள் பணிக்குத் திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்கள் தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். எனினும் ஊழியர்கள் பணிக்குத் திரும்பாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.

    போராட்டத்தின் 15-வது நாளான இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஏராளமான பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், வாடகைக் கார்கள், தனியார் டாக்சி டிரைவர்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வாகனங்களை இயக்கவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொது போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படாததால், ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    போராட்டம் நடத்தும் அரசியல் கட்சியினர்

    மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து பணிமனைகள் முன்பும், பேருந்துகள் முன்பும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அரசியல் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×