search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகள்
    X
    தீவிரவாதிகள்

    காஷ்மீர் விவகாரம் - விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து, விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அதிரடியாக நீக்கியது.

    இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படும் மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியா தனது நாட்டில் செய்துள்ள இந்த நிர்வாக சீர்திருத்தத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீரை தங்களுடன் சேர்த்து கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த பாகிஸ்தானின் ஆசையில் மண் விழுந்துள்ளது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆத்திரத்தில் உள்ளார்.

    இம்ரான்கான்

    இந்தியா மீது தீவிரவாதிகள் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடத்துவார்கள் என்று இம்ரான்கான் பூச்சாண்டி காட்டினார். அவரது உளறலை இந்தியா கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்தியா மீது இம்ரான்கான் ஆத்திரத்தை காட்ட தொடங்கியுள்ளார்.

    காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல இம்ரான்கான் ஆலோசித்து வருகிறார். அது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளை துண்டிக்கப் போவதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார். அவரது இந்த நடவடிக்கைகள் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். என்றாலும் இந்தியாவுக்கு எதிராக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று இம்ரான்கான் துடித்தப்படி உள்ளார்.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் உளவுத்துறை மூத்த அதிகாரிகள், தீவிரவாதிகளை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்குள் தற்கொலை தாக்குதல்களை நடத்துமாறு பேசியதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது. காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள சுமார் 300 தீவிரவாதிகளில் சிலரை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் முயற்சிகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டதையும் உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.

    இதற்கிடையே இந்தியாவுக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி செய்வதாக சர்வதேச உளவு அமைப்புகள் தகவல் கொடுத்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் டெல்லி மற்றும் மும்பை நகரில் தற்கொலை தாக்குதல்களை நடத்த இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு முன்பு இந்த தாக்குதல்களை அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இதற்கிடையே சில விமான நிலையங்களையும் தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, நாக்பூர், சண்டிகர் ஆகிய 7 விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் அல்லது விமானத்தை கடத்த முயற்சி செய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

    கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் 2 தடவை இந்த உஷார் எச்சரிக்கை அறிவிப்பை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டது.

    இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு வரும் ஒவ்வொருவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

    விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான பயணிகள் அனைவரையும் முழுமையாக சோதித்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்டு 15-ந்தேதி வரை இந்த சோதனை தீவிரமாக நடைபெறும். எனவே பயணிகள் விமான நிலையத்துக்கு முன் கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×