search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனம் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
    X

    டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனம் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

    டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய உறுப்பினர்களாக வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுச்சாமி, மாடசாமி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி, என்ஜினீயர்கள் கிருஷ்ண குமார், சுப்பிரமணியன், புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகிய 11 பேரை தமிழக அரசு நியமித்தது.

    இந்த நியமன நடவடிக்கை சட்டவிதிகளின் படியும், சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள நெறிமுறைகளின் படியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

    டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 11 பேரை நியமிக்க கடைபிடிக்கப்பட்ட நடைமுறையில் வெளிப்படை தன்மை இல்லை. எனவே இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.

    “மேல்முறையீட்டு மனுவில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11 பேரும் தகுதி வாய்ந்தவர்கள். பொது நிர்வாகப் பணிகளில் அனுபவம் பெற்று இருப்பவர்கள். உறுப்பினர்களின் தகுதி, பொது வாழ்வு பின்னணி, அனுபவம் போன்ற கூறுகளை சென்னை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. “டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது”. 11 பேர் நியமனத்தில் சரியான வழிமுறைகள் கையாளப்படவில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. மேலும் பணிக்காலத்தை நிறைவு செய்யாத நீதிபதி எப்படி உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
    Next Story
    ×