search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிக் காசோலைகளில் ஆதார் எண் அச்சிடப்படும்: மத்திய அரசு நடவடிக்கை
    X

    வங்கிக் காசோலைகளில் ஆதார் எண் அச்சிடப்படும்: மத்திய அரசு நடவடிக்கை

    வங்கி காசோலைகளில் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை அச்சிடும் நடைமுறை விரைவில் வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு தனித்துவமான “ஆதார்” எனும் அடையாள அட்டையை வழங்கி வருகிறது.

    12 இலக்க எண்கள் கொண்ட இந்த அட்டையை நாடு முழுவதும் அனைத்து பயன்பாட்டுக்கும் அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெயர், முகவரி, கண்பார்வை, கை ரேகை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆதார் அட்டையில் பதிவாகி இருப்பதால், இந்த அட்டையின் சேவை முக்கியமானதாக கருதப்படுகிறது.

    ஆதார் அட்டையில் தில்லுமுல்லு செய்ய இயலாது என்பதால் அது அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் இணைக்கப்பட்டு வருகிறது. நாடெங்கும் குடும்ப அட்டை, பாஸ்போர்ட்டுகளில் ஆதார் எண் சேர்க்கப்படுகிறது.

    இந்த வரிசையில் வங்கி காசோலைகளிலும் அவரவர் ஆதார் எண்களை இணைக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நே‌ஷனல் பாங்க், பாங்க் ஆப் பரோடாவுடன் ஆலோசித்து வருகிறது.


    இதையடுத்து வங்கி காசோலைகளில் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை அச்சிடும் நடை முறை விரைவில் வர உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காசோலை மூலம் நடைபெறும் அதிக தொகையிலான பணப் பரிமாற்றத்தை மத்திய நிதி அமைச்சகத்தால் கண்காணிக்க முடியும்.

    ஒருவர் தொடர்ந்து காசோலை மூலம் அதிக தொகையை பரிமாற்றம் செய்யும்பட்சத்தில் அவர் உரிய வரி கட்டி இருக்கிறாரா? என்பதை உறுதி செய்ய முடியும். இதுபற்றி நிதி அமைச்சக உயர் அதிகரி ஒருவர் கூறுகையில், “காசோலைகளில் ஆதார் எண்கள் இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நிறைய பேர் வருமான வரி செலுத்தும் வளையத்துக்குள் வருவார்கள்” என்றார்.

    Next Story
    ×