search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனார்த்தன ரெட்டி ரூ.100 கோடியை மாற்றினாரா?: டிரைவர் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு
    X

    ஜனார்த்தன ரெட்டி ரூ.100 கோடியை மாற்றினாரா?: டிரைவர் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு

    ஜனார்த்தனரெட்டி தனது மகள் திருமணத்துக்காக ரூ.100 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கினாரா? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அரசு அதிகாரியின் கார் டிரைவர் தற்கொலை கடிதத்தால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி. இவர் பாரதிய ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருந்தார். ஜனார்த்தன ரெட்டி ஊழல் புகாரில் சிக்கி ஜெயிலுக்கு சென்றார். அவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.

    ஜனார்த்தன ரெட்டி சமீபத்தில் தனது மகள் திருமணத்தை ரூ.500 கோடியில் ஆடம்பரமாக பெங்களூரில் நடத்தினார். உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தால் நாடு முழுவதும் மக்கள் பணம் இல்லாமல் திண்டாடும் சூழ்நிலையில் நடந்திருந்த திருமணம் ஆச்சரியத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் பிரச்சினை எடுத்தது. இதை தொடர்ந்து வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் ஜனார்த்தன ரெட்டி தனது மகள் திருமணத்துக்காக ரூ.100 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கினாரா? என்ற தகவல் வெளியாகி உள்ளது. அரசு அதிகாரியின் கார் டிரைவர் தற்கொலை கடிதத்தால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரில் நிலம் கையகப்படுத்தும் பிரிவில் உயர் அதிகாரியாக பீமநாயக் பணியாற்றுகிறார். இவரது கார் டிரைவர் ரமேஷ் நேற்று முன்தினம் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு முன்பு ரமேஷ் எழுதி வைத்துள்ள 11 பக்க கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நிலம் கையகப்படுத்தும் அதிகாரி பீம நாயக்கிடம் கார் டிரைவராக பணியாற்றினேன். அவர் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக சொத்து சம்பாதித்து உள்ளார். 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் வாங்கியுள்ளார்.

    முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணத்துக்காக 100 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொடுத்தார். 20 சதவீத கமி‌ஷனுக்காக மாற்றி கொடுத்தார்.

    2018-ல் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் பீம நாயக் போட்டியிடுவதற்காக ஜனார்த்தன ரெட்டியும் ரூ.25 கோடியை கொடுத்தார். இந்த வி‌ஷயங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். இதை யாரிடமாவது சொன்னால் ரவுடிகளை அனுப்பி கொலை செய்வதாக பீம நாயக் மிரட்டினார். அதோடு ஊதியத்தையும் தராமல் பிடித்து வைத்துக் கொண்டார். இந்த மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜனார்த்தன ரெட்டி மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை அவரது சகோதரர் சோமசேகர ரெட்டி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் முழுக்க முழுக்க கணக்கு காட்டப்பட்ட பணத்தில் நடந்தது. எந்தவித கருப்பு பணமும் மாற்ற வேண்டிய தேவையில்லை. இந்த குற்றச்சாட்டு அனைத்தும் தவறானது. கார் டிரைவர் ரமேஷ் யார் என்றே எங்களுக்கு தெரியாது. தற்கொலை கடிதத்தில் எங்களது பெயரை குறிப்பிடும்படி யாரோ அவரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×