search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்றைய கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை: ஜி.எஸ்.டி. கவுன்சில் மீண்டும் 11-ம்தேதி கூடுகிறது
    X

    இன்றைய கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை: ஜி.எஸ்.டி. கவுன்சில் மீண்டும் 11-ம்தேதி கூடுகிறது

    டெல்லியில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால், வரும் 11-ம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

    இந்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அவ்வகையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரூபாய் நோட்டு அறிவிப்பினால் ஏற்படும் தாக்கம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி. வரைவு சட்டங்கள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. மாநில அரசுகளின் கருத்துக்களும் பெறப்பட்டன. இதையடுத்து அடுத்த கூட்டம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி அருண் ஜெட்லி, “ஜி.எஸ்.டி. வரைவு சட்டங்கள் குறித்து இன்றும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், ஒப்புதல் அளிப்பதற்கு மேலும் சில காலம் ஆகும். ஒப்புதல் பெறுவதற்காக மீண்டும் டிசம்பர் 11 மற்றும் 12ல் மீண்டும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடுகிறது.

    ரூபாய் நோட்டு அறிவிப்பினால் மாநில வருவாயில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க முடியாது. அதற்கு, தனியாக விவாதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை ஏப்ரல் 1-ம்தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
    Next Story
    ×