search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு தடையால் மும்பையில் குற்ற விகிதம் குறைந்துள்ளது: மனோகர் பாரிக்கர் தகவல்
    X

    ரூபாய் நோட்டு தடையால் மும்பையில் குற்ற விகிதம் குறைந்துள்ளது: மனோகர் பாரிக்கர் தகவல்

    உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதால் மும்பையில் குற்ற விகிதம் குறைந்திருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
    பனாஜி:

    மத்திய அரசினால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்தவண்ணம் உள்ளனர். புதிய நோட்டுக்கள் போதிய அளவில் கிடைக்காததால், பொதுமக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் காத்துக்கிடக்கின்றனர். இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பாராளுமன்ற பணிகள் முடங்கி உள்ளன.

    இந்நிலையில், கோவா மாநிலம் அல்டோனா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த விஜய் சங்கல்ப் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. கருப்பு பணம், ஊழல் பணம், தீவிரவாத நிதி மற்றும் போதை மருந்து பணத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள என் நண்பர்களில் ஒருவர் என்னிடம் பேசும்போது, அங்கே கூலிப்படை கொலைகள் குறைந்திருப்பதாக தெரிவித்தார். கூலிப்படைகளுக்கு குறைவில்லை. ஆனால், அவர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. கடந்த 20 நாட்களாக மும்பையில் கொலை விகிதம் பாதியாக குறைந்துள்ளது.

    மும்பையில் போதை மருந்து, கடத்தல் போன்ற குற்றங்களும் குறைந்துள்ளன. கோவாவிலும் கட்டுமான நிறுவனங்களிடம் பணம் பறிக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு தடை நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன். போதைக் கும்பல், தீவிரவாதத்துக்கு நிதி வழங்குவோர், கள்ள நோட்டுக்கள் மற்றும் கருப்புப் பணத்தை பிரதமர் மோடி அகற்றியுள்ளார்.

    டிசம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு கோவா மாநிலம் ரொக்க பரிமாற்றம் இல்லாத மாநிலமாக மாறும். பிரதமரின் இந்த கனவை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×