search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த வாலிபர் பாதுகாப்பு படை வீரர்களிடம் சரண்
    X

    பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த வாலிபர் பாதுகாப்பு படை வீரர்களிடம் சரண்

    பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த வாலிபரை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். தாய் கெஞ்சி கேட்டுக்கொண்டதால் அவர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் நடந்த நெகிழ்ச்சியான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள துஜ்ஜார் பகுதியை சேர்ந்தவர் உமக் காலிக் மிர் என்கிற சமீர் (வயது 26). இவர் கடந்த மே மாதம் திடீரென மாயமானார். பின்னர் அவர் லஷ்கர் இ தொய்பாவில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் காஷ்மீர் வாலிபர்கள் சிலர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட போவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

    துஜ்ஜாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள சோபேர் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மே மாதம் மாயமான வாலிபர் சமீர் ஆயுதங்களுடன் மறைந்து இருப்பது தெரியவந்தது. உடனே பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்தனர். சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் பல முறை சமீரிடம் கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை.

    இதனால் துஜ்ஜாரில் உள்ள சமீரின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் அறிவுரை வழங்கினர். உங்கள் மகனை சரண் அடைய செய்தால் அவர் உயிர் பிழைப்பதுடன், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து சமீரின் தாய், மகன் பதுங்கி இருந்த வீட்டுக்குள் சென்றார். அங்கு தன் மகனிடம், பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தால் அவர்கள் உனக்கு கருணை காட்டுவார்கள், இல்லாவிட்டால் உன்னை சுட்டுக் கொன்று விடுவார்கள் என 2 மணி நேரம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.

    தாயின் உருக்கமான பேச்சை கேட்ட சமீர் பின்னர் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தார். பின்னர் அவர் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காஷ்மீர் வாலிபர்கள் சமீபகாலமாக பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து தவறான வழியை தேர்ந்தெடுப்பதுடன், உயிரையையும் இழக்கின்றனர். எங்களின் நோக்கம் மனித உயிர்களை காப்பாற்றுவது தான். தாயின் பேச்சைக்கேட்டு சமீர் சரண் அடைந்த சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.
    Next Story
    ×