search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டில் நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
    X

    செங்கல்பட்டில் நாட்டின் முதலாவது மருத்துவ பூங்கா: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    நாட்டின் முதலாவது மருத்துவ பூங்காவை செங்கல்பட்டில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் நாட்டின் முதலாவது மருத்துவ பூங்காவை காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 330.10 ஏக்கர் நிலப்பரப்பில், எஸ்.பி.வி.’ என்று அழைக்கப்படும் சிறப்பு நோக்க திட்டத்தின்கீழ் அமைக்க மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

    இந்த பூங்காவை அமைப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைப்கேர் நிறுவனத்துக்கு 330.10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளிக்கும்.

    குறைந்த விலையில், உயர்தர மருத்துவ சாதனங்களை, கருவிகளை தயாரித்து அளிப்பதை ஊக்கப்படுத்தும் விதத்தில் மருத்துவ தொழில் நுட்ப துறையில், இந்த மருத்துவ பூங்கா, நாட்டின் முதல் திட்டமாக அமைகிறது.

    இந்த மருத்துவ பூங்காவில் பல்வேறு மருத்துவ சாதனங்களை, கருவிகளை தயாரித்து வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கும்.

    இந்த மருத்துவ பூங்கா 7 வருடங்களில், பல்வேறு கட்டங்களில் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 3-வது ஆண்டில் இருந்து மனைகள், உள்குத்தகைக்கு விடப்படும். இரண்டாவது கட்டமாக அறிவு மேலாண்மை மையம் அமைக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான முறையில் மனைகளை எச்.எல்.எல். லைப் கேர் நிறுவனம் உள்குத்தகைக்கு விடும். நாட்டில் தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் இந்த மருத்துவ பூங்கா முக்கிய பங்காற்றும். இந்த பூங்கா, வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சாதனங்கள், கருவிகள் இறக்குமதி செய்வதை குறைக்கும்.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முடிவுகள் வருமாறு:-

    * எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயாளிகளின் நலன்களை, உரிமைகளை பாதுகாக்கிற வகையில், ‘எச்.ஐ.வி., எய்ட்ஸ் மசோதா 2014’-ல் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களின் சம்மதம் பெற்றே ரத்த பரிசோதனை செய்யவும், ரத்த பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்களின் ரகசியத்தை பாதுகாக்கவும் வகை செய்கிறது. அதை மீறி ரத்த பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டால், வெளியிடுவோருக்கு 3 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரையில் அபராதம் விதிக்கவும் மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது.

    * டெல்லியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் 2 ஏக்கர் நிலத்தை இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    Next Story
    ×