search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தில் 8-ந்தேதி தாக்கல்: பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
    X

    திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தில் 8-ந்தேதி தாக்கல்: பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

    திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தில் வருகிற 8-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறைக்கு வகை செய்கிறது. இந்த மசோதாவில் மாநிலங்களின் வரி விதிப்பு முறை கைவிடப்பட்டு அனைத்து பொருட்களுக்கும் மத்திய அரசு வரி விதித்து மாநிலங்களுக்கு பங்கு அளிக்கும்.

    இதனால் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2015) மே மாதம் பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு மசோதா நிறைவேறியது.

    ஆனால் மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லாததால் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

    கடந்த ஒரு ஆண்டாக மேல்சபையில் நிறைவேறாமல் முடங்கி கிடந்தது. இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மூத்த மத்திய மந்திரிகள் பேச்சு நடத்தி ஆதரவு திரட்டினார்கள்.

    அப்போது இந்த மசோதாவில் சில முக்கிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் நிபந்தனை விதித்தன. அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி ஒரு சதவீத கூடுதல் வரி ரத்து மற்றும் 5 முக்கிய திருத்தங்களுடன் டெல்லி மேல்-சபையில் கடந்த 3-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பின் திருத்த மசோதா மேல்-சபையில் நிறைவேறியது.

    இந்த திருத்த மசோதா மீண்டும் பாராளுமன்ற மக்களைவையில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) பாராளுமன்றத்தில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    அன்றைய தினமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. எனவே அன்றைய தினம் பா.ஜனதா எம்.பி.க்கள் தவறாமல் கலந்து கொண்டு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பு மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். இதில் 50 சதவீத மாநில சட்டசபைகள் ஆதரவு தெரிவித்தால் போதும்.

    இந்த நடைமுறைகள் முடிந்த பின்பு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
    Next Story
    ×