search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூர் கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
    X

    திருவொற்றியூர் கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் தப்பி ஓட்டம்

    • திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் இரவு முழுவதும் மர்ம நபர்கள் மது குடிப்பது மற்றும் கஞ்சா போதையில் சுற்றி வருகிறார்கள்.
    • கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    மணலி, எட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் ஜோதி என்கிற ஜோதீஸ்வரன் (வயது23). இவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது. நேற்று இரவு ஜோதீஸ்வரன் திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் உள்ள ஒரு குடிசையில் தூங்கினார்.

    நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் அங்கு வந்து குடிசையில் இருந்த ஜோதீஸ்வரனுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் இது மோதலாக மாறியது.

    இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஜோதீஸ்வரனை தரதரவென இழுத்து சென்று அவரது முகத்தில் கத்தியால் கொடூரமாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த ஜோதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    மேலும் அந்த கும்பல் அங்கு நின்று கொண்டு இருந்த ஆடு ஒன்றையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த ஆடு சத்தமிட்டதால் அருகில் உள்ளவர்கள் திரண்டு வந்தனர். அப்போது மர்ம கும்பலை பிடிக்க முயன்ற மணிமாறன் என்பவரின் கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது ஜோதீஸ்வரன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கையில் காயம் அடைந்த மணிமாறனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கொலையுண்ட ஜோதீஸ்வரன் உடலும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில் இரவு முழுவதும் மர்ம நபர்கள் மது குடிப்பது மற்றும் கஞ்சா போதையில் சுற்றி வருகிறார்கள். அவர்கள் அங்கு மீனவர்கள் பயன்படுத்த கட்டி வைத்து உள்ள சிறிய குடிசைகளில் படுப்பதும் வழக்க மாக உள்ளது. இதேபோல் ஜோதீஸ்வரன் இருந்த போது படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

    முன்விரோதத்தில் திட்டமிட்டு கொலை நடந்ததா? அல்லது கஞ்சா போதையில் மர்ம நபர்கள் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×