என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் வில்வ மணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னேரி அடுத்த கோளூர் சுடுகாட்டு முட்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற கோளூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தொழிலாளர்கள் மழை தண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.
    • வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

    திருவள்ளூர்:

    திருத்தணி நகரத்தில் சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தார் சாலை அமைக்கப்படும் போது திருத்தணி பகுதியில் பலத்த மழை கொட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கொட்டும் மழையின் போது பணியை நிறுத்தாத தொழிலாளர்கள் மழைதண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.

    இதுபற்றி அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்பியபோது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த தொழிலாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்து கொண்டு இருந்தனர்.

    இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. மழைநீரில் தார்சாலை அமைத்தால் எப்படி தாங்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
    • பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.

    ஆவடி:

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே பட்டாபிராம் ரெயில்வே கேட் உள்ளதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு 6, வழித்தட ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டினார். பணிகளை முழுமையாக முடிக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தண்டுரை, சித்துக்காடு, அணை கட்டு சேரி, திருமணம், மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்று கருணாகரச்சேரி, நெமிலிச்சேரி என பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகள் முடிவடைந்த ஒருவழிதடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

    • மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
    • 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த அண்ணாமலை சேரி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசுஉயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 300-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளியில் மொத்தம் 16 ஆசிரியர்கள் இருந்த நிலையில் பணி மாறுதல், பணி ஓய்வு காரணமாக ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போது தொடக்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரும் உயர்நிலைப் பள்ளிக்கு 3 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர்.

    வேறு வேறு பாடப்பிரிவு ஆசிரியர்கள் பாடம் எடுப்பதால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்தும், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரியும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலைசேரி-பொன்னேரி சாலையில் மறியிலில் ஈடுபட்டனர்.

    மேலும் அவ்வழியே வந்த 3 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். அவர்களிடம் திருப்பாலைவனம் போலீ

    சார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    ஆவடி:

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆவடியில் நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி கவுதம்-பிரியா. இவர்களது மகள் ரூபாவதி (5), வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி மயங்கி விழுந்தார்.

    உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
    • சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர்-வண்டலூர் இடையே 62 கி.மீட்டர் தூரத்திற்கு 400 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரேஸ், அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வாகன ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே கார் பந்தயம் நடந்த வீடியோ காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி கொடிகளுடன் 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சீறிப்பாய்கின்றன.

     காரின் மேல் பகுதியை திறந்து காருக்குள் நின்றபடி வாலிபர்கள் தங்களது செல் போன்களில் கார் பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.

    இந்த வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

    • அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையது.
    • பக்தர்களுக்கு வளையல், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.

    பெரியபாளையம்:

    பூரம் நட்சத்திரம் என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் இருந்து சக்தி வெளிப்பட்ட நட்சத்திரம் ஆகும். சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரம் போன்று அம்மனுக்கு பூரம் நட்சத்திரம் சிறப்புடையாது.

    இந்ந நிலையில் அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூரம் விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உற்சவர் திருபுரசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் வளையல் பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

    வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு வளையல், குங்கும பிரசாதமாக வழங்கப்படும். புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் கர்ப்பிணி பெண்கள் அம்மனை வழிபட்டு வளையல் பிரசாதத்தை வாங்கி செல்வார்கள்.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பூரம் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை காலை அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை காலை சர்வ சக்தி மாதங்கி அம்மனுக்கு காயத்ரி ஹோமம், துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    இதன் பின்னர் 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. மூலவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

    பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.

    இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
    • பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது.

    ஆண்டு தோறும் ஆடி அமாவாசை மற்றும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கோவில் குளக் கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    பக்தர்கள் தங்கும் இடம், விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமா னோர் கோவில் நுழைவு வாயில், வெளியே உள்ள சிமெண்ட் சாலை, பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளிலும் தூங்கினர். இரவில் திடீரென சிறிது நேரம் மழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    ஆடிஅமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலை வீரராகவர் கோயில் அருகில் உள்ள ஹிருத்தா பநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் வீரராகவப் பெருமாளை வழி பட வந்தனர். ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெரு மாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் காரண மாக திருவள்ளூர் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது.
    • கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    சென்னை புறநகர் பகுதியை குறி வைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவேற்காடு பகுதியில் என்ஜினீயர் ஒருவர் வீட்டில் முகமூடி கும்பல் 103 பவுன் நகையை கொள்ளையடித்து கைவரிசை காட்டி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம், ஈ.ஜி.பி. நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    வெளிநாட்டில் ஜனார்த்தனன் வேலை பார்த்து வந்த நிலையில் அயனம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் ஜனார்த்தனன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அண்ணாநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ அதில் இருந்த 103 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.

    அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனன் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நேரத்தை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    என்ஜினீயர் ஜனார்த்தனன் கடந்த 10 ஆண்டுகளாக சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்தார்.

    தற்போது மகளின் படிப்புக்காக கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் அயனம்பாக்கம் பகுதிக்கு வாடகைக்கு குடி வந்துள்ளார். அவர் இருந்த வீட்டின் மேல் பகுதியில் வேறொருவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது தான் மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாக இல்லை. இதனால் கொள்ளையர்கள் வந்து சென்றது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.

    கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு வீட்டை திறந்து செல்வது பதிவாகி உள்ளது.

    இரவு 7.45 மணிக்கு வீட்டுக்குள் செல்லும் கொள்ளையன் 8.15 மணிக்கு நகை-பணத்துடன் வெளியே செல்கிறான். அவனுடன் கூட்டாளிகள் மேலும் சிலரும் வந்திருக்கலாம். அவர்கள் வீட்டின் வெளி பகுதியில் நோட்டமிட்டு காத்திருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பழைய குற்றவாளி களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    என்ஜினீயர் வீட்டில் 103 பவுன் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • முருகருக்கு மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடி கிருத்திகை விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.

    இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மலைக்கோவில், மலை அடிவாரம், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் 160 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    • கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது.
    • ரசாயனங்கள் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் லாரிகள் மட்டும் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

    இதே பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் கேன்களில் தின்னர் என்ற ரசாயனம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்து ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலா ளர்கள் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது ஒரு கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ அதிக அளவில் பரவியதால் அருகில் இருந்த மற்றொரு லாரிக்கும் பரவியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    அந்த இடத்தின் அருகி லேயே வாகனங்கள் நிறுத்து மிடம் உள்ளது. அதில் கண்டெய்னர் லாரிகள் உள்பட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாகனங்களி லும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

    உடனடியாக அதிக அளவில் தீப்பற்றி எரிந்த லாரியை டிரைவர் சாமர்த்தியமாக வேகமாக ஓட்டி வந்து அருகில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். சிறிது நேரத் தில் அந்த லாரியில் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பூந்த மல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை , ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.

    ஆனால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்த ரசாயனங்கள் முழுவதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீப்பற்றியதும் லாரியை டிரைவர் உடனடியாக சாலையோரம் கொண்டு வந்து நிறுத்தியதால் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

    தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை சர்வீஸ் சாலைக்கு ஓட்டி வந்தபோது லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயனத்தால் சாலை முழுவதும் சிறிது நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×