என் மலர்
திருவள்ளூர்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
- பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது.
ஆண்டு தோறும் ஆடி அமாவாசை மற்றும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கோவில் குளக் கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
பக்தர்கள் தங்கும் இடம், விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமா னோர் கோவில் நுழைவு வாயில், வெளியே உள்ள சிமெண்ட் சாலை, பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளிலும் தூங்கினர். இரவில் திடீரென சிறிது நேரம் மழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஆடிஅமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலை வீரராகவர் கோயில் அருகில் உள்ள ஹிருத்தா பநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் வீரராகவப் பெருமாளை வழி பட வந்தனர். ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெரு மாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் காரண மாக திருவள்ளூர் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது.
- கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
சென்னை புறநகர் பகுதியை குறி வைத்து மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவேற்காடு பகுதியில் என்ஜினீயர் ஒருவர் வீட்டில் முகமூடி கும்பல் 103 பவுன் நகையை கொள்ளையடித்து கைவரிசை காட்டி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம், ஈ.ஜி.பி. நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
வெளிநாட்டில் ஜனார்த்தனன் வேலை பார்த்து வந்த நிலையில் அயனம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஜனார்த்தனன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அண்ணாநகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு சென்றார்.
பின்னர் அவர்கள் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ அதில் இருந்த 103 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.
அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனார்த்தனன் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நேரத்தை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
என்ஜினீயர் ஜனார்த்தனன் கடந்த 10 ஆண்டுகளாக சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்தார்.
தற்போது மகளின் படிப்புக்காக கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் அயனம்பாக்கம் பகுதிக்கு வாடகைக்கு குடி வந்துள்ளார். அவர் இருந்த வீட்டின் மேல் பகுதியில் வேறொருவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது தான் மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாக இல்லை. இதனால் கொள்ளையர்கள் வந்து சென்றது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.
கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு வீட்டை திறந்து செல்வது பதிவாகி உள்ளது.
இரவு 7.45 மணிக்கு வீட்டுக்குள் செல்லும் கொள்ளையன் 8.15 மணிக்கு நகை-பணத்துடன் வெளியே செல்கிறான். அவனுடன் கூட்டாளிகள் மேலும் சிலரும் வந்திருக்கலாம். அவர்கள் வீட்டின் வெளி பகுதியில் நோட்டமிட்டு காத்திருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முகமூடி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பழைய குற்றவாளி களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
என்ஜினீயர் வீட்டில் 103 பவுன் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
- முருகருக்கு மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
திருவள்ளூர்:
அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது.
ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

ஆடி கிருத்திகை விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.
இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மலைக்கோவில், மலை அடிவாரம், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் 160 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
- கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது.
- ரசாயனங்கள் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் லாரிகள் மட்டும் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.
இதே பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் கேன்களில் தின்னர் என்ற ரசாயனம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்து ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலா ளர்கள் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ அதிக அளவில் பரவியதால் அருகில் இருந்த மற்றொரு லாரிக்கும் பரவியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அந்த இடத்தின் அருகி லேயே வாகனங்கள் நிறுத்து மிடம் உள்ளது. அதில் கண்டெய்னர் லாரிகள் உள்பட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாகனங்களி லும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
உடனடியாக அதிக அளவில் தீப்பற்றி எரிந்த லாரியை டிரைவர் சாமர்த்தியமாக வேகமாக ஓட்டி வந்து அருகில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். சிறிது நேரத் தில் அந்த லாரியில் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பூந்த மல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை , ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.
ஆனால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்த ரசாயனங்கள் முழுவதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீப்பற்றியதும் லாரியை டிரைவர் உடனடியாக சாலையோரம் கொண்டு வந்து நிறுத்தியதால் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை சர்வீஸ் சாலைக்கு ஓட்டி வந்தபோது லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயனத்தால் சாலை முழுவதும் சிறிது நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- அதிகாலை முதலே பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருத்தணி:
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும். உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடி பாடி சென்று முருகனை வழிபட்டனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.
பக்தர்கள் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே காவடி செலுத்த கட்டணம் ரத்து செய்யப் பட்டு இருந்ததை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.
பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக் கப்படவில்லை. கோவில் வாகனம் மட்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டுகளின் வழியாகவும் சென்று சுவாமியை தரிசித்தனர்.
வாகன நெரிசலை தவிர்க்க திருத்தணி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் அனைத்து பஸ்களும், வாக னங்களும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து கோயில் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தன.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதி களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வ தற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பிரசாதம். குடிநீர். கழிப்பிட வசதிகள் சுகாதாரம் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
காவடி கொண்டு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் வீசி செல்லும் பூமாலைகளை அகற்றுவதற்கும், மலைக் கோயில். மலை பாதை பகுதிகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் அகற்றவும் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணயர் அருணாச்சலம் (பொறுப்பு) அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு காமிராக்கள் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
- வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது.
- 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன.
பொன்னேரி:
பழவேற்காட்டில் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை கடற்கரையில் வைத்து செல்வது வழக்கம்.
அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது மீன்பிடி வலைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்த மீன்பிடி வலைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மீனவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் வலைகளுக்கு தீவைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்து நாசமான வலைகளின் சேதமதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன. பழவேற்காடு திருமலை நகர், கோட்டை குப்பம் பகுதியில் கடந்த மாதத்தில் மீன்பிடி வலைகள் எரிந்ததாகவும் இது குறித்து மீன்வளத்துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பழவேற்காடு பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மீன்பிடி வலைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ஆடி கிருத்திகை திருவிழா 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
- காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை திருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:-
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பா ர்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளன.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு காமிராக்கள் 160 இடங்களிலும், பொதுதகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட உள்ளன.
கூடுதல் பஸ்கள் இயக்கவும், 4 தற்காலிக பஸ்நிலையங்களும், சிறப்பு ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகை விழாவுக்கு வருகை தரும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவுக்கு 200 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி 27-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு கட்டணம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் காவடிக்கான கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சந்திரன் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடை.
- அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல்.
பொன்னேரி:
காட்டுப்பள்ளி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகர், காமராஜர் துறை முகம் மற்றும் அப்பகுதுயை சுற்றி உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு சாம்பல் கழிவு, நிலக்கரி, கண்டனர் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தச்சூர், பொன்னேரி, இலவம்பேடு, நாலூர், மீஞ்சூர்வழியாக தினமும் சென்று வருகிறன்றன.
இதனால் பொன்னேரி, மீஞ்சூர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
மேலும் தொடர்ந்து விபத்துக்களும் ஏற்பட்டன. அவசர தேவைக்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.
வண்டலூர் சாலையில் சென்றால் 2 டோல்கேட் மற்றும் கூடுதல் தொலைவு என்பதால் தச்சூர்-பொன்னேரிய சாலையில் சென்று வந்தன.
இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர். இதைத்தொடரந்து பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந் உத்தரவுப்படி தச்சூரில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பொன்னேரி போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் எச்சரிக்கை பதாகைகள் ஆங்காங்கே வைத்து உள்ளனர்.
மேலும் தடையை மீறி வரும் கனரக வாகனங்களுக்கு ரூ.1500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் கனரக வாகனங்களை கண்காணித்தபடி வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
- கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
- தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு உதவியதாக கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க.கவுன்சிலர் ஹரிதரன் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே சிக்கிய வக்கீல்களான ஹரிகரன், அருள் ஆகிய 2 பேருக்கும் ஹரிதரன் நண்பர்களாக இருந்து உள்ளார். அவர்கள் கூறியபடி கொலைகுற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிதரன் வெங்கத்தூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முதல் கூவம் ஆற்றில் தீயணைப்பு வீரர்களுடன், தண்ணீரில் மூழ்கி தேடும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடினர். இதில் 3 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் வீசப்பட்ட மற்ற செல்போன்களையும் மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதல் 2-வது நாளாக மெரினா மீட்பு குழுவினர், திருவூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஸ்கூபா குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை 6.30 மணிமுதல் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
- கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல்.
- 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 16வது நபராக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே கைதான ஹரிஹரன் தந்த தகவலின்பேரில், 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அருளின் செல்போன், அதிமுக கவுன்சிலரான ஹரிதரனிடம் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
பஸ், ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் இடையே 'ரூட்டுதல' பிரச்சனையால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் பஸ், ரெயில்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடம் மாணவர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி மின்சார ரெயில் வந்தபோது 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரே பெட்டியில் ஏறினர்.
அவர்கள் ரெயில் புறப்பட்டதும் ரகளையில் ஈடுபட தொடங்கினர். சில மாணவர்கள் மின்சார ரெயிலின் ஜன்னலில் ஏறி நின்றபடி கூச்சலிட்டு சாகச பயணம் செய்தனர். மேலும் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடியும் சென்றனர். "பச்சையப்பா கல்லூரி மாஸ்...." என்று சத்த மிட்டபடி பயணம் செய்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மாணவர்களின் அட்டகாசத்தை கண்டித்த சில பயணிகளையும் மாணவர்கள் சிலர் கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பயணிகள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடனே பயணம் செய்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "மாணவர்கள் ஆபத்தான நிலையில் ரெயில் பொட்டியின் ஜன்னலில் நின்றபடி பயணம் செய்ததை பார்க்கவே பயமாக இருந்தது. மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான ரெயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் இல்லை" என்றனர்.
- மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை.
ஆவடி:
பட்டாபிராம், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்க ப்பட்டுள்ள ரெயில்வே பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், அவரச தேவைக்கு செலவோரும் கடும் அவதி அடைந்தனர்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.33 கோடி செலவில் அப்பகுதியில் நான்கு வழிச்சாலையுடன் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது.
இதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன.
இதனை 2 ஆண்டுகளில் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 9 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலப்பணி முடிவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரெயில்வே மேம்பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மேம்பால பணி தற்போது நிறை வடைந்து உள்ளது. பாலத்தில் தடுப்புகள் அமைத்து வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
இதில் பாலத்தில் சென்னை- திருவள்ளூர் நோக்கி வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் பணிகள் முடிந்து உள்ளன.
திருவள்ளூர்-சென்னை செல்லும் பாதையில் மட்டும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. இதுவும் வரும் நாட்களில் விரைந்து முடிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
எனவே பொதுமக்களின் நலன்கருதி பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






