search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபாச படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்- நல்வழிப்படுத்த அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
    X

    (கோப்பு படம்)

    ஆபாச படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்- நல்வழிப்படுத்த அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை

    • இளைஞர்களின் மனநிலை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
    • தவறான சிந்தனையை போக்கி, இயல்பு வாழ்க்கை வாழச் செய்ய வேண்டும்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகன் மீது பாலியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை பிடித்து வைத்துள்ளனர். தனது மகனை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிகுமார் ஆஜராகி வாதாடுகையில், மனுதாரர் மகன் உள்பட 2 பேர் கைதாகி உள்ளனர்.

    அவர்கள் இருவரும் சிறுவர்கள் என்பதால் சிறார் நீதிச்சட்டத்தின்படி விசாரிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுதாரர் தெரிவிப்பதைப்போல சட்டத்திற்கு புறம்பாக அவரது மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரும், 18 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள். தற்போது இவர்கள் பாலியல் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். இதற்கு செல்போன்களே காரணம்.

    ஹார்மோன் மாற்றங்களினால் செல்போன்களில் வரும் ஆபாச படங்களை இளைஞர்கள் பார்த்து, மனக் குழப்பத்திற்கு ஆளாகி, தவறான வழியில் திசை திருப்பி விடப்படுகிறார்கள். இதனால் பாலியல் சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்படுகின்றனர். இளைஞர்களின் மனநிலை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

    குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கி, தவறான சிந்தனையை போக்கி, இயல்பு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும்.

    இதுதொடர்பாக தமிழக அரசு உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். கைதாகும் இளைஞர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அவர்கள் எதிர்காலத்தில் பெரும் குற்றங்களில் ஈடுபட கூடியவர்களாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×