என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், அமைச்சர்களின் நடவடிக்கைகளால் விமர்சனங்களை பெற்று வருகிறது. மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசும்போது அமைச்சர் பொன்முடி 'ஓசி பயணம்' என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பின்பு அதற்காக மன்னிப்பு கேட்டதும் நடைபெற்றது.

    சமீபத்தில், ஒரு சமூகத்தை குறிப்பிட்டு ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், தஞ்சாவூரில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை ஒருமையில் பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமேடையில் அமைச்சர் தனது உதவியாளரை ***மாடா நீ என திட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. 

    • மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்.
    • கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே இராராமுத்திரைக் கோட்டை ஊராட்சியில் இன்று புதிய பொது விநியோக கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவர்னர்களுக்கும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.

    மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது கவர்னரின் நோக்கமாக உள்ளது. இது ஒருபோதும் நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு துணைவேந்தர் பணி நியமனம் செய்யபடும்.

    மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
    • சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மருங்குளம் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ்-விஜயலட்சுமி தம்பதியின் மகள் விதுலா ஸ்ரீ (வயது 2).

    இந்த நிலையில் சிறுமி விதுலா ஸ்ரீ சென்னையில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவரை அவரது பாட்டி அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவிகளுக்கு பரத கலை ஆசிரியை ஒருவர் பரதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த சிறுமி விதுலா ஸ்ரீ தானாகவே பரதம் ஆட தொடங்கி உள்ளார். சிறுமியிடம் இருந்த திறமையை அந்தப் பரத நாட்டிய ஆசிரியை மட்டுமல்லாமல் கோவிலில் கூடி இருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய திறமையா என மனதார பாராட்டினர்.

    இதையடுத்து விதுலா ஸ்ரீக்கு திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆட அந்த ஆசிரியை கற்றுக் கொடுத்தார்.

    பரத முத்திரைகள், சுலோகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்று கொடுத்தார். இதனை கற்பூரம் போல் உடனே பற்றிக் கொண்ட சிறுமி விதுலா ஸ்ரீ திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடி கற்றுக் தேர்ந்தார்.

    இதனை தொடர்ந்து சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுமி விதுலாஸ்ரீ பங்கேற்று திருப்புகழ் பாடலுக்கு பரதம் ஆடியபடியே பரதமுத்திரை மற்றும் சுலோகங்கள் கூறி சாதனை படைத்தார்.

    சிறுமியின் திறமை டிவைன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

    • மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர்.
    • தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலருக்கும் காங்கிரஸ் மேயர் சரவணனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் விழுந்து மேயர் உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் குட்டி தட்சிணாமூர்த்தி, திவ்யபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் செல்வம், ம.தி.மு.க. கவுன்சிலர் பிரதீபா உள்ளிட்ட பலர் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், அதனை தீர்வு செய்யும்படியும் மேயர் சரவணனிடம் கோரிக்கை வைத்தனர்.

    காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் அய்யப்பன் பேசும்போது, சுதா எம்.பி., பொதுமக்களை சந்திப்பதற்காக மாநகராட்சி ஏற்பாட்டில் அலுவலகம் அமைத்து தரவேண்டும் என மேயருக்கு தபால் கொடுத்துள்ளார். இந்த தபாலிற்கு மேயர் ஏன் பதில் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த மேயர் சரவணன் அது சாதாரண கடிதம். எனக்கு தபால் முறையாக பதிவு தபாலில் வரவில்லை. ஆகவே நான் அதற்கு பதில் கூற முடியாது என்றார்.

    இதனால் ஆவேசம் அடைந்த கவுன்சிலர் அய்யப்பன், சுதா எம்.பி., மேயர் சரவணன், நான்(அய்யப்பன்) ஆகிய 3 பேருமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவா்கள். நாங்கள் 3 பேரும் ஒரே கட்சியில் இருந்தும் மேயர் சரவணன், சுதா எம்.பி.யின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். எனவே இதனை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

    இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள், மாநகராட்சி செயல்திட்ட பொருளின் கோப்புகள் எங்கு உள்ளது. அதில் கையெழுத்திட்டீர்களா? என மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மற்ற உறுப்பினா்களும் அதே கேள்வியை எழுப்பினர்.

    இதனால் கோபம் அடைந்த மேயர் சரவணன், கோப்புகள் என்னிடம் தான் இருக்கின்றன. இந்த கூட்டம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் கோப்புகளை நான் கொண்டு வந்து காட்டுகிறேன் என்றார்.

    இதனை ஏற்றுக்கொள்ளாத மற்ற கவுன்சிலர்கள், கோப்புகளை காட்டிவிட்டு தான் நீங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும் என்றனர்.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய மேயர் சரவணன், தனது நாற்காலிக்கு பின்புறம் உள்ள ஓய்வு அறையை நோக்கி வேகமாக சென்றார்.

    இதனை பார்த்த கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி விரைந்து சென்று ஓய்வு அறைக்குள் மேயர் சரவணனை செல்ல விடாமல் கதவை மூடி தடுத்தார்.

    தொடர்ந்து குட்டி தட்சிணாமூர்த்தியின் தலைக்கு மேலே தாவிச் சென்ற மேயர் சரவணன், ஓய்வு அறையின் கதவை தள்ளியபடி செல்ல முயன்றார். இதனால் மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் சரவணனை சூழ்ந்து கொண்டனர்.

    அப்போது மேயர் சரவணன், திடீரென தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி கூட்ட அரங்கில் தனது மேயர் உடையுடன் தரையில் விழுந்து உருண்டு புரண்டார். தன்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த துணை மேயர், மாநகராட்சி அதிகாரிகள் மேயர் சரவணனை ஓய்வு அறைக்கு தூக்கி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் அமளி துமளியானது.



    • சர்ச்சை காரணமாக பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம்.
    • பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டு, இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார்.

    ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார். இதனால் அறையின் பூட்டை உடைத்து அவர் பதவியேற்றார். இதுகுறித்த விபரம் வருமாறு:-

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017- 18-ம் ஆண்டில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உரிய தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் 40 பேருக்கும் தகுதி காண்பருவம் முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துணை வேந்தராக இருந்த திருவள்ளுவனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த நவம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து, துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை பொறுப்பு துணை வேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை கவர்னர் நியமித்தார்.

    இந்நிலையில் பொறுப்பு துணை வேந்தர் சங்கருக்கும், பேராசிரியர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதிக்கும் பதிவாளர் (பொ) தியாகராஜன் ஓரிரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். அதில் சங்கரின் செயல்பாடுகளால் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே அசாதாரண சூழல் ஏற்படும் நிலை உள்ளது.

    பல்கலைக்கழக நலன் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கையாக சங்கருக்கு பதிலாக பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதி துணைவேந்தர் பணிகளை கவனிக்க எதிர்வரும் ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்படும் வரை செயல்படுவார் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதை பார்த்த பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உடனடியாக பதிவாளர் (பொ) தியாகராஜனுக்கும், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனுக்கும் கடிதம் அனுப்பினார். அதில், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பாளராக தியாகராஜன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்.

    பல்கலைக்கழக வேந்தரின் (கவர்னர்) ஆணைப்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதாலும், பதிவாளர் பொறுப்பாக பணிபுரிந்து வரும் தியாகராஜனும் இந்த விசாரணை வரம்புக்குட்பட்ட ஒரு கல்வியாளராக இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்து ஆணையிடப்படுகிறது.

    அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை இணை பேராசிரியர் வெற்றிச்செல்வனை மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யப்படும் வரை பதிவாளர் பொறு ப்பாக நியமனம் செய்து ஆணை இடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த இரு கடிதங்களால் எழுந்த சர்ச்சை காரணமாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

    இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பு துணை துணைவேந்தர் சங்கர் உத்தரவுப்படி பொறுப்பு பதிவாளராக வெற்றிசெல்வன் பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, வெற்றி செல்வன் இன்று பதிவாளர் அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் அறையின் கதவை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் சென்றார்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக பல்கலைக்கழக ஊழியர்கள் கதவை உடைத்தனர். பின்னர், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் மற்றொரு தனி அறையில் அமர்ந்து உள்ளார்.


    பொறுப்பு பதிவாளராக வெற்றி செல்வன் பதிவேற்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தமிழ் பல்கலைக்கழகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மணிக்கார தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது மகன் அகமது தம்பி என்பவருக்கு சொந்தமான டீத்தூள் ஏஜென்சி திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பிடாரன் தெருவில் உள்ளது.

    இங்கு டீ துள்களை குடோனில் சேகரித்து வைத்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இவரது உறவினரான ஹபீப் ரஹ்மான் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிகள் முடிந்ததும் ஊழியர்களை குடோனை பூட்டி சென்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனில் இருந்து கடும்புகை வெளியே வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் குடோன் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஹபீப் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து தீயணைப்புதுறை அலுவலர் மாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் எரிந்து சேதமானதாக ஹபீப்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் மின்கசிவு காரணமா? தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இன்று அதிகாலையில் திருவிடைமருதூர் அருகே டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
    • முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.

    அய்யம்பேட்டை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். மேலும், இந்த போராட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல்கலும் எழுந்தன.

    இந்த நிலையில், அண்ணாமலையை கண்டித்து தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ஒருவர் அதைவிட நூதன போராட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாண்டியம்மாள். இவரது கணவர் ராம் பிரகாஷ். தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்து கொண்ட சம்பவம் வீரத்திற்கு புகழ்பெற்ற தமிழகத்தை இழிவுபடுத்தும் செயல் எனக்கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அதன்படி, இவர் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். பின்னர், தான் எடுத்துவந்த சுமார் 150 முட்டைகளை எடுத்து, அதனை தனக்குத்தானே தலையில் அடித்து உடைக்கத் தொடங்கினார். முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் போராட்டம் நடைபெற்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் கரிகாலன் (வயது 42). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கபட்டார்.

    இந்நிலையில் கரிகாலன் தனது கையில் உள்ள ஊசி செலுத்தும் வென்ப்ளானை கழட்டி வீசி உள்ளார். அப்போது ஊசி செலுத்த சென்ற பயிற்சி பெண் டாக்டர், இது பற்றி கேட்டார். அப்போது கரிகாலன் திடீரென பயிற்சி டாக்டரை தாக்கினார்.

    இது குறித்து டாக்டர் மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரிகாலனை கைது செய்தனர். இந்த சம்பவம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
    • அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் முத்தாண்டிபட்டி, ஆச்சாம்பட்டி, புதுக்குடி உள்ளிட்ட 30 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய அங்காடி கட்டிடங்கள், பள்ளிக்கட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார் .

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து 25-ம் தேதி போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், பெண் பிள்ளைகள், மாணவிகள் நலன் குறித்து குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி, நடைபெற்ற நிகழ்வு குறித்து உடனடியாக பாதுகாப்பு குழுவிடம் சொல்லி இருந்தால் இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும். தனிப்பட்ட அச்ச உணர்வு, பெண்மைக்குரிய பாதுகாப்பு, மனநிலை இவைகளை மனதில் வைத்து இரண்டு தினங்கள் கழித்து கூறி இருந்தாலும் கூட குற்றவாளியை உடனே கைது செய்து இருக்கிறோம்.

    குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கொண்டு மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மனதில் வைத்து அரசியல் செய்ய முற்பட்ட கட்சி தலைவர்களுக்கு தரும் விளக்கம் என்னவென்றால், கடந்த காலங்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எல்லாம் மாநில அரசே துணை நின்ற சம்பவம் உண்டு.

    பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிய போதெல்லாம் நிராகரித்தார்கள். ஆனால் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறோம். கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அச்சப்பட்டார்கள். அது ஆளுங்கட்சியின் அழுத்தம்.

    ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட மாணவி புகார் இரண்டு நாள் கழித்து அளித்தாலும் சுதந்திர உணர்வோடு யாருடைய தங்கு தடை இன்றி நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்ட மனமில்லாமல் இதை காரணம் காட்டி அரசை குறை சொல்லும் மனநிலை தான் உள்ளது.

    அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

    இருந்தாலும் மாணவிகளின் நலன் காக்க பெருந்துணை புரிவோம். மூன்று மாத காலம் அமைதியாக இருந்த தமிழகத்தில் மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் அண்ணாமலை. தி.மு.க. ஆட்சி செயல் சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது. தோல்வி பயத்தில் அண்ணாமலை உளறி கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாட்ஷா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றதில் தவறில்லை.
    • குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பத்திற்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம் நடத்தியது.

    தஞ்சையில் இன்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது, தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    அம்பேத்கர் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா பேசியதை முழுமையாக கேட்காமல் மக்களிடம் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பேத்கர் வாழ்ந்த போதும் அவரது மறைவுக்கு பிறகும் எப்போதும் அவருக்கு உரிய மரியாதை அளித்து வருவது பா.ஜ.க தான். தற்போது அமித்ஷா குறித்து பொய் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை.

    தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகளை பார்க்கும்போது பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் 58-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் பலத்த காயமடைந்தனர்.

    இந்தப் பயங்கர குண்டு வெடிப்பை நடத்திய பாட்ஷா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றதில் தவறில்லை. ஆனால் பல ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்து கோஷமிட்டு சென்றதைப் பார்க்கும்போது தமிழகத்தில் பயங்கரவாதிகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறதோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு தேச பக்தர்களை போற்ற அரசாங்கம் தயாராக வேண்டும்.

    தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகள் தேர்தல் நேரத்தில் வாக்குகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் நடந்து வருகிறது.

    குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பத்திற்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம் நடத்தியது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.
    • பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியாகராஜர் சுவாமிகள். இவரை தியாக பிரம்மம் என அழைக்கிறார்கள்.

    இவருடைய சமாதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இசை கலைஞர்கள் ஒன்று கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சி தியாகராஜர் ஆராதனை விழா என அழைக்கப்படுகிறது.

    அதன்படி தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆண்டு ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கணேஷ், அறங்காவலர்கள் டெக்கான் மூர்த்தி, சுந்தரம், உறுப்பினர்கள் சுதாகர் மூப்பனார், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா அடுத்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க நாளான 14-ந் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது.

    தொடக்க நிகழ்ச்சியில் சபையின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி, மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி தினமான 18-ந்தேதி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா நடக்கிறது. தேசிய நிகழ்ச்சியான அன்றைய தினம் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர் குறித்து ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும். அன்றைய தினம் சங்கீத வித்வான்கள், வித்வாம்சினிகள் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். விழா நடைபெறும் ஐந்து நாட்களிலும் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்தியாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் உடலை வைத்தபடியே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சந்தியா (வயது 32). இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் பெங்களுருரில் வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சந்தியா 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பிரசவத்திற்காக சந்தியாவும், அவரது கணவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் சந்தியாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவருக்கு ஆண்குழந்தை இறந்து பிறந்தது. மேலும் அவருக்கு ரத்தபோக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் சந்தியாவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் உடலை வைத்தபடியே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் சிலர் ஆவேசமடைந்து மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து அடித்து உடைக்க தொடங்கினர். சிலர் மருத்துவமனை மீது கல்வீசி தாக்கினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×