search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே காவலாளியை கொன்ற வாலிபர்
    X

    சுசீந்திரம் அருகே காவலாளியை கொன்ற வாலிபர்

    • வடசேரி பஸ் நிலையத்தில் முருகனின் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
    • தூத்துக்குடிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45).

    இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராதா (42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற முருகன் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து ராதா கோட்டார் போலீசில் புகார் செய்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சொத்தவிளை கடற்கரையில் முருகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.முருகன் உடல் சற்று அழுகிய நிலையில் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பதில் சந்தேகம் இருந்தது.

    இதையடுத்து சுசீந்திரம் போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் முருகனின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் முருகனுக்கு உடல் பகுதியில் கத்தி குத்து காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வயிறு, நெஞ்சு, கைப் பகுதி உள்பட 5 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது. எனவே முருகனை யாரோ குத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிபடை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் முருகனை கொலை செய்தது நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வசித்து வந்த அவரது நண்பர் என்பது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அவர் கொசுவலை கம்பெனி வைத்துள்ளார். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதனால் அவரது நண்பரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் முருகனின் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனவே முருகனை கொலை செய்து விட்டு அவரது நண்பர் மோட்டார் சைக்கிளை வடசேரி பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு வெளியூருக்கு தப்பி சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

    கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வாலிபரின் சொந்த ஊர் தூத்துக்குடி என்பதால் அவர் தூத்துக்குடிக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினார்கள். இதையடுத்து தூத்துக்குடிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

    அவர் தற்பொழுது சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அவரை கைது செய்தால் தான் முருகன் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வரும்.

    Next Story
    ×