என் மலர்
சேலம்
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது.
- கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தித்திக்கும் சுவையான மாம்பழங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1-ந் தேதி தொடங்கும் இந்த மாம்பழம் சீசன் தொடர்ந்து ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்தக்கால கட்டத்தில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து காணப்படும்.
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, மல்கோவா, நடுசாலை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகிறது. இந்த தோட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் தினமும் சேலத்தில் உள்ள பல்வேறு குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர் ஊழியர்கள் மூலம் ரகம் வாரியாக மாம்பழங்கள் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து தரமான பெரிய அளவில் உள்ள மாம்பழங்கள் வெளியூர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர சேலத்தில் உள்ள தெருவோர கடைகள், சிறிய, சிறிய, தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடைவீதிகளில் மாம்பழம் வாசம் கமகமவென வீசுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலத்தில் வசிக்கும் மக்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பார்சல்கள் மூலமும் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் மாம்பழங்கள் தேக்கம் அடையாமல் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சித்திரை மாதம் 1-ந் தேதி முதல் சீசன் தொடங்கினாலும் இன்று முதல் 45 நாட்களுக்கு மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். சீசன் களை கட்டியுள்ளதால் விலையும் குறைந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். சேலம் நகரின் அனைத்து தெருக்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது.
- மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் தொடங்குகிறது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்காடு வருகை தந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாரமங்கலம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து இல்லம் தேடி மருத்துவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவ வசதிகள் குறித்தும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபயிற்சியாக சென்று மக்களை சந்தித்து பேசினார்.
- சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் பதிவானது. அதன் தொடர்ச்சியாக மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
குறிப்பாக சங்ககிரியில் நேற்று மாலை 3 மணி நேரத்திற்கு மேல் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.
இதே போல ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் இடி, மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது.
ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் கன மழையாக கொட்டியது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மக்கள் கருதிய நிலையில் லேசான தூறலுடன் மழை நின்று போனது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 46.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 0.7, ஏற்காடு 8.6, ஆனைமடுவு 1, ஆத்தூர் 7, ஏத்தாப்பூர் 10, கரியகோவில் 1, மேட்டூர் 14 மி.மீ., டேனீஸ்பேட்டை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 91.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்று அன்புமணி பேசினார்.
- அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ அதன் பிறகு கட்சிக்கு வா. முதலில் குடும்பத்தை பார், என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்க கூடாது. ஐயா உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளார் அதை பயன்படுத்தி படித்து வேலைக்கு செல்லுங்கள்" என்று பேசினார்.
விசிக தலைவர் திருமாவளவனின் முழக்கமான அத்துமீறு என்பதை குறிப்பிட்டு அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அத்துமீறு என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர் என்று அன்புமணிக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "அமைப்பாவதால் மட்டும் தான் அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும் என்று 1991-92 காலகட்டத்தில் நான் முழக்கம் எழுதினேன். தனியாளாக அத்துமீற முடியாது. அமைப்பாக இருந்தால் தான் அத்துமீற முடியும். தனியாளாக கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் விட மாட்டார்கள். ஆனால் அமைப்பாக திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.
இந்த அத்துமீறலுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் அத்துமீறி என்று சொல்ல மாட்டேன் என்று சிலர் கலாய்க்கின்றனர். அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது. அது ஒரு தொலைநோக்கு பார்வை, 2000 ஆண்டுகால அடிமைத்தளையை உடைத்தெறியக்கூடியது அது. இந்த முழக்கம் ஒரு சாதிக்கு மட்டும் உரியது கிடையாது.
நடக்கக்கூடாது என்றால் நடப்போம். பேச கூடாது என்று பேசுவோம். இந்த இடத்தில நுழையக்கூடாது என்றால் நுழைவோம். எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள் உள்ளது என்பதற்கான குரலுக்கு பெயர் தான் அத்துமீறு" என்று தெரிவித்தார்.
- சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது.
- கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
சேலம்:
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிருந்தாதேவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 48-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை விழா மலர் கண்காட்சி தொடக்க விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களை கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட உள்ளது.
சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளது. அதேபோன்று, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட வுள்ளன.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்ல பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், கபடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஏற்காடு கோடை விழாவையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பஸ்கள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
- விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் சேலத்தில் தங்கி இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
நேற்று இரவு பயிற்சி முடிந்ததும் வள்ளுவர் சிலை அருகே உள்ள அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இரவு 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மொபட்டில் பின்னால் வந்த ஒரு நபர் திடீரென அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தொடர்ந்து டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் அவரை பிடித்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (வயது 44) என்பதும் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், மேலும் தள்ளு வண்டியில் வைத்து துணி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
- கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
- மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று கூறினர். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேற்கு கோட்டத்திறகுட்பட்ட கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் போடிநாயக்கன்பட்டி மின்பாதையில் நாளை (14-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெயில் நகர், பெரியார் நகர், ஜங்சன், ஆண்டிப்பட்டி, கபிலர் தெரு, பழைய சூரமங்கலம், சோழம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் மல்லமூப்பம்பட்டி மின்பாதையில் நாளை மறுநாள் (15-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாய்க்கன்பட்டி, ராமகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்தார்.
- வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சந்தோசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் எட்டி குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது70), இவரது மனைவி வித்யா (65), பாஸ்கரன்-வித்யா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டின் முன் பகுதியிலேயே மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் என்ற தினேஷ், வாசுதேவன் என்ற ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீட்டில் வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதனை பார்த்த அவர்களது மகன் வாசுதேவன் கதறினார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த அவர்களது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கடப்பாறை, சம்மட்டி உள்பட பயங்கர ஆயுதங்களால் தம்பதியை தலையில் அடித்து கொலை செய்து விட்டு பாஸ்கரன் மற்றும் வித்யா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொலையாளி சந்தோஷ்
அப்போது வட மாநில வாலிபர் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடியதுடன் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (32) என்பது தெரிய வந்தது.
அவரை சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேடினர். தொடர்ந்து வீட்டையும் கண்காணித்தனர். அப்போது வெளியல் சுற்றி விட்டு ரத்தக்கரை படிந்த உடையை மாற்றுவதற்காக இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சந்தோசை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது உடன் வேலை செய்பவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த கடனை கட்ட முடியாததால் கடனை கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சந்தோஷ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
அப்போது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்த போது அங்கு பாஸ்கரன் தம்பதியினர் அணிந்திருந்த நகைகளை பார்த்து அந்த நகைகளை கொள்ளையடித்து கடனை அடைக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று மதியம் இந்த தம்பதி தனியாக இருப்பதை அறிந்த சந்தோஷ் கடப்பாறை மற்றும் சம்மட்டியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தொடர்ந்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வித்யாவை சம்பட்டியாலும் கடப்பாறையிலும் முதலில் தலையில் தாக்கினார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த பாஸ்கரனையும் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகையுடன் தப்பி சென்ற சந்தோஷ் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார்.
இரவாகி விட்ட நிலையில் குளித்து விட்டு உடையை மாற்றுவதற்காக வீட்டிற்கு வந்த போது சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். இன்று சந்தோசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலை நடந்து 4 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கமிஷனர் அதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் போலீசாரை வெகுவாக பாராட்டினார். இந்த கொலையில் கொலையாளியை கைது செய்ய கேமரா பதிவுகள் உதவியதாகவும், ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை மற்றும் கிச்சிப்பாளையத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் கேமரா பதிவால் குற்றவாளியையும் இதே போல 4 மணி நேரத்தில் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
- பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், படகு குழாம், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், கிளியூர் நீர் வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கன மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு மேலும் குளிர்ச்சி அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. நேற்று சாரல் மழையிலும் படகு குழாமில் குடும்பத்துடன் ஆனந்தமாக சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இதே போல சேலம் மாவட்டம் சங்ககிரியில் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி. மக்களுக்காக உழைக்கின்ற கட்சி.
- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைய தினம் ஊடகத்தில் பார்த்தபோது அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டு இருப்பது போல பேட்டி அளித்துள்ளார் என்று கூறி உள்ளார். நான் விழித்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால்தான் பொறுத்துக் கொள்ள முடியாத ரகுபதி ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். ரகுபதி பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடுத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். ரகுபதியை நாட்டிற்கு அடையாளம் காட்டியது அ.தி.மு.க. இன்று நன்றியை மறந்து அடிமை குரல் கொடுத்து கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி. மக்களுக்காக உழைக்கின்ற கட்சி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாமலும் மக்கள் பணிகளை முதன்மையாக செய்கின்ற கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக விளங்கி கொண்டிருக்கின்றது என சொல்லுகிறார்.
போலீஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருட்டு போனது குறித்து புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடு, நான் அந்த இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருகிறேன் என போலீசார் ஒருவர் கூறுகிறார். அதற்கு அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என்றார். உடனே காவலர் அந்த பெண்ணை அவதூறாக பேசுகிறார். இதையாவது பார்த்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகவே இந்த ஆட்சியின் லட்சணத்தை மக்கள் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நான் ஏற்கனவே டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது தமிழகத்திற்கு தேவையான நிதி பல துறைகளுக்கு வராமல் நிலுவையில் இருக்கின்றது. இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தேன். அதன் விளைவாக 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான தேவையான நிதியை விடுவித்து இருக்கிறார். அதோடு மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-க்கான நிலுவை நிதி வழங்க வேண்டும் என்றோம். அதையும் ஒதுக்கீடு செய்திருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதையும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு தேவையான நிதி பெற்று தருவதிலும், தமிழ்நாடு வளர்வதற்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைக்கு ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களுடைய பிரச்சனை கவனிப்பதில்லை. இனியாவது இந்த அரசு விழித்து கொண்டு இந்த குறைபாடுகளை நீக்க வேண்டும்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி முதலில் பா.ஜனதாவுடன் எங்கள் கூட்டணி அமைந்திருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் காலம் இருக்கின்றன. இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்.
தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் அரசு பணியிடங்கள் சுமார் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதுபோல் அரசு துறை சார்ந்த பணியிடங்கள் 28 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சி நிறைவடைந்து 4 ஆண்டுகள் ஆகி 5-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையின்போது அறிவித்த 5½ லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பவில்லை.
பொது விநியோகத் திட்டம் என்பது முக்கியமான திட்டம் ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை பெறுகின்றனர். இதில் பணியாளர்கள் அவ்வப்போது காலியாகும் போது நிரப்பப்பட வேண்டும் புதிய ரேஷன் கடை திறக்கும் போது அதற்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் இதைப் பற்றி இந்த அரசு கவலைப்படுவதில்லை. மக்களை பற்றி கவலைப்படாத ஒரே அரச தி.மு.க. ஆட்சி. ஆனால் வெளியில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் தான் மிக சிறப்பாக செயல்பட்டதாக வெளிப்படுத்துவார்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற தோற்றத்தை வெளியிட்டு வருவது திமுக அரசாங்கம்.
சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பவும் எனக் கூறினார்கள். ஆனால் நாங்கள் பேசுவது அவர்கள் வெளியிடுவதே இல்லை. நீதிமன்றம் சென்றோம் அங்கும் நியாயம் கிடைக்கவில்லை முதலமைச்சர் அமைச்சர்கள் பேசுவதை காட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர் பேசுவதை காட்டுவதில்லை. அந்த அளவுக்கு மக்கள் பிரச்சனைகளை நாங்கள் எடுத்து பேசி இருக்கிறோம் அதை காட்ட மறுக்கிறார்கள் அதற்கான பதிலை மட்டும்தான் ஒளிபரப்புவார்கள். அங்கேயே அதற்கு நீதி கிடையாது.
பஹல்காமில் நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவின் மக்களை நிலைகுலைய செய்தது. அனைத்து மக்களிடத்திலும் வேதனையான சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். அதற்கு இந்திய அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் பயங்கரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் வேரோடு அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு நமது முப்படைகளும் ஒன்றாக இணைத்து அதற்கு முழு அதிகாரம் வழங்கி அதனடிப்படையிலேயே பயங்கரவாதம், பயங்கரவாத முகாம்களை அண்டை நாட்டில் இருந்தாலும் முழுமையாக செயல்பட்டு அளித்துள்ளனர். முற்றிலும் ஒலிக்கும் விதமாக முதல் கட்ட பணியை தொடங்கியுள்ளனர் அதற்காக அ.தி.மு.க. வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் நம்ம ராணுவத்திற்கு முப்படைகளுக்கும் மிகத் திறமையாக துல்லியமாக தீவிரமாக போரிட்டு வெற்றி கண்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
- தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
மேட்டூர்:
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 2323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3619 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.






