என் மலர்
சேலம்
- மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார்.
- நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 20-ந்தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற நரேஷ் குமாரின் காலில் துப்பாக்கியால் போலீசார் சுட்டனர்.
நரேஷ் குமார் கத்தியால் வெட்டியதில் 2 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நரேஷ் குமார் வயதான மூதாட்டிகளையும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நகை கொள்ளையடித்து விட்டு அவர்களை கொலை செய்து வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நடப்பாண்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த கோடை விழாவின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் ஏற்காடு கலையரங்கில் நடக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.
இந்த விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, மலையரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் 1½ லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வன விலங்குகளை பாதுகாத்து வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யானை, காட்டு மாடு, குதிரை, முயல், முதலை, குரங்கு உள்பட வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அண்ணா பூங்கா வளாகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளை கொண்ட மலர் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்கோடா பாயிண்ட், லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த கோடை விழாவையொட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி, கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள், கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கோடை விழாவையொட்டி சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. அதாவது ஏற்காட்டுக்கு செல்லும் போது வாகனங்கள் கோரிமேடு-அடிவாரம் வழியாகவும், அங்கிருந்து கீழே இறங்கும் போது கொட்டச்சேடு-குப்பனூர் வழியாகவும் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
- சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
- தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
சேலம்:
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோல சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக திருமண நிகழ்ச்சிகள், பல்வேறு விஷேசங்கள் மற்றும் திருவிழாக்களையொட்டி தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த குண்டு மல்லிகை இன்று கிலோவுக்கு ரூ.900 வரை விலை குறைந்து ரூ.320 என விற்கப்பட்டு வருகிறது.
அதே போல கடந்த காலங்களில் ரூ.600-க்கு விற்ற முல்லை பூ ரூ.400 வரை விலை குறைந்து இன்று ரூ.200 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) :-
மல்லிகை-ரூ.320, முல்லை-ரூ.200, ஜாதி மல்லி, காக்கட்டான்-ரூ.160, கலர் காக்கட்டான்-ரூ.100, மலை காக்கட்டான்-ரூ.160, ஏற்காடு மலை காக்கட்டான்-ரூ.160, சம்மங்கி-ரூ.20, சாதா சம்மங்கி-ரூ.50, அரளி-ரூ.100, வெள்ளை அரளி-ரூ.100, மஞ்சள் அரளி-ரூ.160, செவ்வரளி-ரூ.160, ஐ.செவ்வரளி-ரூ.120, நந்தியா வட்டம்-ரூ.300, சின்ன நந்தியா வட்டம்-ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எதிர்வரும் வைகாசி, ஆனி மாதங்களில் முகூர்த்த நாட்கள் வருவதால் அந்த சமயத்தில் பூக்கள் விற்பனை நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
- கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (23-ந் தேதி) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம் தளிர் நடைபோட்டி, அடுப்பில்லா சமையல், நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், தவளும் போட்டிகளும் நடக்கிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
25-ந் தேதி திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சியும், மிமிக்கிரி, செமி கிளாசிக் நடனம், கோலாட்டம், பம்பை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், 26-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், படகு இல்லத்தில் படகுப்போட்டியும் நடக்கிறது.
27-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கதக் மற்றும் குச்சிபுடி நடனமும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மூலம் பொதுமக்களின் வசதிக்காக ஏற்காட்டுக்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கூடுதலாக 2 உள்வட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
- வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
- வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த மாம்பழம் மற்றும் தக்காளி மொத்த வியாபாரியான தக்காளி ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:
வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பில் அடகு வைக்கும் நகைகளை திருப்ப முழு தொகையும் வங்கியில் செலுத்தி திருப்ப வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான பணத்தை திரட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. இதில் ஒரு நாளைக்கு ஒரு மாத வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்களுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது
மேலும் ஒவ்வொருவருக்கும், தனது தாய் மற்றும் மனைவியின் பெற்றோர் மூலம் தங்க நகைகள் கிடைக்கிறது. இந்த நகைகளை தங்களுக்குள்ளது என்று எப்படி யாரிடம் சான்று வழங்க முடியும், இது முடியாத செயல், இதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கடந்த காலங்களில் நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் கடன் கொடுத்த நிலையில் தற்போது 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தொழிலுக்கு போதுமான பணத்தை திரட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.
எனது வியாபாரத்திற்கு தேவையான பணத்தை பெற அரசு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளேன். இதன் மூலம் வங்கிகளுக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்டி வருகிறேன். இனி வரும் நாட்களில் புதிய அறிவிப்புகளால் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு என்னை போன்றவர்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால் அரசு வங்கிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும்.
நகைக்கு தர உறுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பால் அதற்கு தனியாக செலவு செய்யும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு உதவுவது போல அமைந்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள என்னை போன்ற நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய அறிவுப்புகளை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி ஆறுமுகம் - ஆட்டோ டிரைவர் ஏழுமலை
வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை கூறுகையில்,
ஆட்டோ ஓட்டும் தொழில் மூலம் சில நேரங்களில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அவசர தேவை மற்றும் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி உள்ளது.
ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்கும் போது மொத்தமாக பணத்தைக் கட்டி அதனை மீட்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளதால் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகைகளை எளிதில் வங்கிகளில் அடகு வைக்க முடியாது. 20 ஆண்டுக்கு முன்பு வாங்கிய தங்க நகைக்கான ஆதாரத்தை எங்கிருந்து நாங்கள் கொண்டு வருவோம். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கந்து வட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் என்றார்.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 6,233 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,698 கன அடியாக அதிகரித்தது.
இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 12,819 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 78.45 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது.
- அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,683 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 108 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 77.46 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை விரைவில் 109 அடியை எட்டும் தருவாயில் உள்ளது.
- மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சிற்றோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரிகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.
இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஆத்தூர், தம்மம்பட்டி, கரியகோவில், எடப்பாடி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவில் கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இன்று காலை வரை சாரல் மழையாக பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் மாநகரில் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, லைன்மேடு, அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகரில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 100.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 39.4, ஏற்காடு 30, வாழப்பாடி 16.6, ஆனைமடுவு 58, ஆத்தூர் 46, கெங்கவல்லி 29, தம்மம்பட்டி 55, ஏத்தாப்பூர் 20, கரியகோவில் 40, வீரகனூர் 29, நத்தக்கரை 27, சங்ககிரி 4.3, எடப்பாடி 30.6, ஓமலூர் 18, டேனீஸ்பேட்டை 23 மி.மீ. மழையும் மாவட்டம் முழுவதும் 566.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சந்திரசேகரபுரம், குருசாமிபாளையம், புதுப்பட்டி, வடுகம், காக்காவேரி, முத்துக்காளிப்பட்டி, ஆண்டகளூர் கேட், மங்களபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன மழையாக கொட்டியது. இந்த தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. மழையை தொடர்ந்து அந்த பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது.
கனமழை காரணமாக வயல்களிலும் பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல் நகர பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை அதிகாலை வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் தவித்தனர்.
எருமப்பட்டியில் 60 மி.மீ., குமாரபாளையம் 34.2, மங்களபுரம் 18.4, மோகனூர் 29, நாமக்கல் 118, பரமத்தி 7, புதுச்சத்திரம் 82, சேந்தமங்கலம் 51, திருச்செங்கோடு 10, கலெக்டர் அலுவலகம் 39.2, கொல்லி மலை 56 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 624.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் நேற்று இரவு ஏற்காட்டில் நல்ல மழை பெய்து சீதோசன நிலை மிகவும் குளுமையாக மாறி உள்ளது. இந்த சீதோசன நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்காடு வந்துள்ள இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, பக்கோடா பாயிண்ட் லேடீ ஸ் சீட் உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.
குறிப்பாக படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்தனர். ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மலைப்பாதையிலும் மற்றும் அண்ணா பூங்கா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்காடு போக்குவரத்து போலீசார் 30-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவரது மகன் சாரதி (22), தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் சாருபிரியா (22) இவர்கள் 2 பேரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தனர்.
இந்த நிலையில் சாரதி மற்றும் சாருபிரியா ஆகிய 2 பேரும் உடன் பணிபுரியும் நண்பர்கள் சிலருடன் ஏற்காடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் தாதகாப்பட்டி கேட்டில் இருந்து சாரதி, சாருபிரியா ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கிருந்த சிறு பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சற்று ஒதுங்கி செல்ல முயன்று மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதில் தலை நசுங்கிய நிலையில் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வயிற்று பகுதியில் காயம் அடைந்த சாருபிரியாவும் சற்று நேரத்தில் பலியானார்.
பின்னால் வந்தவர்களை காணவில்லையே என்று அவர்களுடன் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்த போது விபத்தில் சிக்கி 2 பேரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறிய அவர்கள் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் திரண்ட அவர்களது உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது.
இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள். சாலையில் இருந்த சிறு குழியால் 2 பேர் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,479 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 108.31 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை பகுதியில் 2.4 மி.மீட்டர் மழை பெய்தது.






