என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் தீக்குளிக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    கொரோனா ஊரடங்கின் காரணமாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு மனுக்கள் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தொலைபேசி வாயிலாக திங்கட்கிழமை தோறும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை கோரிக்கைகளை தெரிவிக்கவும், வாட்ஸ்-அப், இ-மெயிலில் மனுக்களை அனுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிடையாக வந்து மனுக்கள் அளிக்க பொதுமக்கள் பலர் திங்கட்கிழமை தோறும் வருகைதருகிறார்கள். இதனால் மனுக்களை இலவசமாக எழுதி கொடுக்க வசதியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை விசாரித்து கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ஒருவர் தீக்குளிக்க பாட்டிலில் பெட்ரோலுடன் வந்தார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, பெட்ரோல் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் தீக்குளிக்க வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று எச்சரித்தனர். மேலும் கார்த்திக் மீது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெட்ரோலுடன் தீக்குளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டவுன் பகுதியில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஆறுமுகம் (வயது 46) , அழகுசுந்தரம் (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    ஆலங்குடி அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் சேந்தமங்கலம் ஐ.டி.ஐ. காலனியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவர் புதுக்கோட்டை சென்று விட்டு அங்கிருந்து நேற்று காலை ஸ்கூட்டரில் ஆலங்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆலங்குடி கோவிலூர் நான்கு ரோடு அருகே வந்தபோது பட்டுக்கோட்டையில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிப்பர் லாரி டிரைவர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவிலை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வலுவான சுகாதார கட்டமைப்பால்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆர்.டி. பி.சி.ஆர். மூலம் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவை விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுடன் மலேரியா, டெங்கு போன்ற மழைக்கால நோய் பரவல் தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த 4 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மேலும் வந்தால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது முகக்கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து தலா ரூ.200 வீதம்,35 நபருக்கு ரூ.7000உடனடியாக அபராதம் விதித்தார்.

    இப்பணியில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, துணை ஆட்சியர்(பயிற்சி) , தாசில்தார் சேக் அப்துல்லா, காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பிலாவிடுதி கிராம நிர்வாக அலுவலர் தீபிகா ஆகியோர் ஈடுபட்டனர்.

    அரிமளம் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் உடல் எரிக்கப்பட்டதால் 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்துள்ள ஏம்பல் விசூர் கிராமத்தை சேர்ந்த அன்பு மகன் பாண்டி (வயது 28). புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வரும் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் கொடிகுலத்தை சேர்ந்த இளவரசி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளவரசி நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இளவரசி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், போலீசுக்கு தெரியாமல் இளவரசி உடலை தகனம் செய்தனர்.

    தகவல் அறிந்த வி.ஏ.ஓ. கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இளவரசியின் கணவர் பாண்டி, மாமனார் அன்பு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காட்டுப்பட்டியை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி வைரமுத்து (வயது 78). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடேசன் இறந்து விட்டார். இதனால் வைரமுத்து தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 3 மர்ம நபர்கள் வைரமுத்துவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் வைரமுத்துவிடம், உங்கள் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதனால், உங்களை அழைத்து வரச்சொன்னார்கள் என்று கூறியுள்ளனர். இதை நம்ப மறுத்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, மர்ம நபர்கள் திடீரென்று அவரை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு உள்ளிட்ட 6¼ பவுன் நகைகளை பறித்தனர்.

    அவர் சத்தம் போட்டதால், அவரை ஒரு தூணில் கட்டிப்போட்டு மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர். கொடுக்க மறுத்ததால் பீரோவை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் பொருட்களை களைத்து போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    வைரமுத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று வைரமுத்துவை காப்பாற்றினர். பின்னர் இது குறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைவிரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்று 99 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,105 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 115 பேர் குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்த வகையில், இதுவரை 6,192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம், தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது.

    அரிமளம் ஒன்றியத்தில ஏம்பல் பகுதியை சேர்ந்த 24 வயது பெண், கல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், அதே ஊரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 20 வயது பெண், 35 வயது பெண், 13 வயது சிறுமி, நெடுங்குடி கிராமத்தை சேர்ந்த 31 வயது வாலிபர், 42 வயது ஆண், 54 வயது பெண், குரும்பூர் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண், ஒரு மாத குழந்தை, 4 வயது சிறுமி, 55 வயது பெண்.

    அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், 4 வயது சிறுவன், 25 வயது பெண், 53 வயது பெண், 51 வயது ஆண், 13 வயது சிறுமி, கே.ராயவரம் கிராமத்தை சேர்ந்த 44 வயது ஆண், கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் உள்பட 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றியை தடுக்க இந்தி எதிர்ப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை குறைகூறி தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அந்த நிலை இருக்காது. பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். அந்த வெற்றியை தடுப்பதற்காக தி.மு.க. 1965 ஆம் ஆண்டு பார்முலாவான இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.

    பா.ஜ.க. தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கவில்லை. மும்மொழிக் கொள்கையால் தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் வளரும். இந்தி மொழியை கற்பதால் வடநாட்டில் வாழும் தமிழர்கள் நமது தாய் மொழியை கற்பதற்கு உதவியாக இருக்கும்.

    இந்தி வேண்டாம் போடா என்று டி-சர்ட்டில் எழுதி அணிந்துள்ளவர்கள் இந்தியில் பேசுவதை சமூக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். நாங்கள் (பா.ஜ.க.வினர்) இந்தி வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம். எங்களுக்கு இந்தி தெரியாது. விருப்பப்பட்டால் படியுங்கள் என்று தான் கூறுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில மகளிரணி செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், மாவட்ட இளைஞரணி தலைவர் சக்தி குமரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடியுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). சொந்தமாக செம்மறி ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சன்னாசி மனைவி பாப்பு (60). இவரும் ஆடு வளர்க்கிறார்.

    நேற்று மதியம் ஆறுமுகமும், பாப்புவும் கருங்குடி கண்மாயில் தங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திடீரென்று ஆறுமுகம் மீது மின்னல் தாக்கியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

    ஆறுமுகம் நின்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் நின்றிருந்த பாப்பு படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் விஜயபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மெய்யழகு மனைவி முத்துலெட்சுமி (35). மகள்கள் மகேஸ்வரி (19), மஞ்சுளா (14). நேற்று மதியம் முத்துலெட்சுமி தனது 2 மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் மீது மின்னல் தாக்கியது.

    இதில் முத்துலெட்சுமி, மகேஸ்வரி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    அறந்தாங்கி அருகே மகனுடன் தீக்குளித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பகாட்டை சேர்ந்தவர் முத்து (வயது 45). இவரது மனைவி ராதா(40). இவர்களுக்கு அபிஷேக்(13), சபரி (11) ஆகிய 2 மகன்கள். இந்தநிலையில் ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், முத்துவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால், மன வேதனை அடைந்த ராதா, நேற்று இரவு தனது 2 மகன்கள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி விட்டு தனது உடலிலும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் சம்பவ இடத்திலேயே ராதா, சபரி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். அபிஷேக் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபிஷேக்கை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி, வடகாட்டில் குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்டது தாரணி நகர். இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்நிலையில் தாரணி நகருக்கு செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. சமீபத்தில் அறந்தாங்கி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    மழைநீர் சாலையில் உள்ள குழியில் நிரம்பி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழிக்குள் விழுந்து காயம் ஏற்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடகாடு அரசு மருத்துவமனை சாலை கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி வரை இணைப்பு சாலையாக உள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை வடகாடு மருத்துவமனை வரை மட்டுமே ஒரளவுக்கு தார் சாலையாக உள்ளது. அதன் பிறகு கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி வரை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் வடகாடு மற்றும் கொத்தமங்கலத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, சோளம், கடலை, கரும்பு மற்றும் பூஞ்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இந்த சாலையில் மழைக்காலத்தில் சைக்கிளில் கூட தங்களது விவசாய விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக, விவசாயிகள் கூறினர். மேலும் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை அறுவடை செய்ய அறுவடை எந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விவசாய பொருட்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு வரும் போது, தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    ×