என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து பசியுடன் வாடுபவர்கள் பசியாற நூதன ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அறந்தாங்கி நகராட்சி தாலுகா ஆபீஸ் சாலையில் பொது இடத்தில் கண்ணாடி பெட்டி வைத்துள்ளனர். இந்த பெட்டியில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் உணவு வைக்கப்பட்டு இருக்கும்.
பசியுடன் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த உணவை எடுத்து சாப்பிடலாம். இதற்கு பணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல் வசதிப்படைத்தவர்கள் உள்பட உணவு தானம் செய்ய விரும்புபவர்கள் ஓட்டலில் வாங்கியோ அல்லது வீட்டில் சமையல் செய்து கொண்டு வந்தோ உணவு வைக்கலாம். இதனை இல்லாதவர்கள் எடுத்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கண்ணாடி பெட்டியில் உள்ள உணவை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பழைய சாப்பாடு வைக்காத வகையில் கண்காணிப்பார்கள். இந்த கண்ணாடி பெட்டியை நேற்று சமூக ஆர்வலர்கள் வைத்தனர். சமூக ஆர்வலர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்த கண்ணாடி பெட்டியில் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள், ஏதாவது சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உணவு வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் கால்சென்டர் தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு அதற்கான பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், 19 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆயிரத்து 505 இயங்கி வருகின்றன. கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கு மட்டும் பிரத்யேகமாக 450 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சென்னையில் விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு 8 நிமிடங்கள் ஆகிறது. அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்று பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். உலகிலேயே இந்த முறை தமிழகத்தில் மட்டுமே பின்பற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் சுகாதார கட்டமைப்பு இங்கு உள்ளது. நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனை.
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு, சிக்குன் குனியா தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு வாரத்திற்குள் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்வதற்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் தமிழ்நாடு வனத்தோட்ட மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு சோதனை நடத்தினர். அப்போது, வெளிநபர்கள் யாரையும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் உள்ளே இருந்த நபர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை முடிந்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சோதனையின் போது, அறந்தாங்கி வனத்தோட்டக் கண்காணிப்பாளர் வள்ளிகண்னுவிடம் இருந்த கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு 04322-22355 செல்: 94981 57799 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 7,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,977 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,047-ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குளிபிறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 400-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்காமல் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல, முறையாக குடிநீரும் வழங்கப்படுவதில்லையாம்.
இதனை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரியும் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் குளிபிறை பகுதியில் அவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குளிபிறை 3-வது வார்டு உறுப்பினர் பொன்னழகி தலைமை தாங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்த எழுத்தாளர் துரை குணா. சமூக ஆர்வலரான இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனிநபர்களால் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முருகன் கோவில், ஆதி பராசக்தி கோவில்களை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்தில்லா நெடுஞ்சாலையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதையடுத்து எழுத்தாளர் துரைகுணா சார்பில் கறம்பக்குடி பகுதிகளில் அரசு அதிகாரிகளை கண்டித்து பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
அதில், கறம்பக்குடி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனிநபர்களால் கட்டப்பட்ட வழிபாட்டு தல கட்டிடங்களை அரசாணை நிலைப்படி அகற்றுவது எப்படி? என்றும் கீழ்க்கண்ட நபர்களுக்கு கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய்கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு ஒருநாள் நாள் பயிற்சி வகுப்பு எடுக்கப்படும். இடம்,கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பாதுகாப்பான அரங்கம். கறம்பக்குடி என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் எழுத்தாளர் துரைகுணா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து துரைகுணா மீது, அரசு அதிகாரிகள் பற்றி அவதூறு பரப்பியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று காலை துரைகுணாவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அரசு அதிகாரிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாக துரைகுணா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






